பிறந்து ‘ஒரு மாதமே’ ஆன... ‘பச்சிளம்’ குழந்தைக்கு நேர்ந்த ‘கொடூரம்’... விசாரணையில் ‘பெற்றோர்’ கொடுத்த ‘உறையவைக்கும்’ வாக்குமூலம்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Mar 06, 2020 12:01 AM

மதுரையில் பிறந்து ஒரு மாதமேயான பச்சிளம் குழந்தையை பெற்றோரே கொலை செய்து புதைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏடுத்தியுள்ளது.

Madurai Husband Wife Arrested For Killing One Month Old Girl Baby

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள புள்ளநேரி கிராமத்தைச் சேர்ந்த தம்பதி வைரமுருகன் - சௌமியா. இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ள நிலையில், கடந்த ஜனவரி 31ஆம் தேதி இரண்டாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் கடந்த மார்ச் 2ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக அந்தக் குழந்தை உயிரிழந்ததாகக் கூறி வைரமுருகன் குடும்பத்தினர் குழந்தையை வீட்டின் முன் புதைத்துள்ளனர். ஆனால் அக்கம்பக்கத்தினருக்கு குழந்தையின் மரணத்தில் சந்தேகம் எழ, அவர்கள் இதுபற்றி வி.ஏ.ஓ-விற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதன்பிறகு வி.ஏ.ஒ அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் குழந்தையின் பெற்றோரான வைரமுருகன், சௌமியா மற்றும் வைரமுருகனின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர்கள் இரண்டாவதாக மீண்டும் பெண் குழந்தை பிறந்ததால் குழந்தையைக் கொலை செய்ததாக கூறி போலீசாரை உறைய வைத்துள்ளனர். இதைத்தொடர்ந்து உசிலம்பட்டி தாசில்தார், டி.எஸ்.பி முன்னிலையில், அரசு மருத்துவர்கள் புதைக்கப்பட்ட குழந்தையின் உடலைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்துள்ளனர்.

மேலும் குழந்தையின் பெற்றோர் கள்ளிப்பால் கொடுத்து குழந்தையைக் கொலை செய்ததாக கூறியுள்ள போதிலும், பிரேத பரிசோதனை முடிவுக்குப் பின்னரே குழந்தை இறந்ததற்கான காரணம் உறுதி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வைரமுருகன், சௌமியாவுடன் சேர்த்து இதில் தொடர்புடைய சிங்கத்தேவன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். 30 ஆண்டுகளுக்கு முன் உசிலம்பட்டி வட்டாரத்தில் அதிகளவில் பெண் குழந்தைகளைக் கொல்லும்  சம்பவங்கள் நடந்துவந்த நிலையில், தற்போது மீண்டும் இந்த கொடூரம் தலை தூக்கியுள்ளது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CRIME #MURDER #MADURAI #POLICE #BABY #GIRL #HUSBAND #WIFE