‘வீட்டிலிருந்தே வேலை செய்யுங்க’... ‘ஐடி ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Oct 10, 2019 07:40 PM
சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள ஐடி நிறுவன ஊழியர்கள் வெள்ளிக்கிழமையன்று வீட்டிலிருந்து வேலை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகிய இருதலைவர்களும், வெள்ளிக்கிழமை அன்று மதியம், சென்னை விமானநிலையம் வருகின்றனர். பின்னர் அங்கிருந்து சென்று, மகாபலிபுரத்தில் மாலை சந்திப்பு நிகழ்த்த உள்ளனர். இந்த சந்திப்பு மற்றும் அதுசார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகள், சனிக்கிழமை மதியம் வரை அங்கு நடைபெற உள்ளது. இதையொட்டி ஓ.எம்.ஆர். சாலை, கிண்டி, கத்திபாரா, சோழிங்கநல்லூர், சின்னமலை உள்ளிட்ட தெற்கு சென்னையின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தெற்கு சென்னை பகுதியில்தான், ஐடி நிறுவனங்கள் பெருமளவில் உள்ளன. இதையடுத்து, அலுவலகம் வரும் போது ஏற்படக்கூடிய போக்குவரத்து நெருக்கடி பிரச்சினையை சமாளிப்பதற்காகவும், பாதுகாப்பு கெடுபிடிகளிலிருந்து நிம்மதியாக பணியாற்றும் சூழல் ஏற்பட வேண்டும் என்பதற்காகவும் பல ஐடி நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை அன்று வீட்டிலிருந்தே வேலை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளன.
இதுகுறித்து, ஏற்கனவே சில ஐடி நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் சென்னை மாநகர காவல் துறையினர் இது தொடர்பாக ஆலோசனைகளையும் நடத்தியுள்ளதாகத் தெரிகிறது. மேலும், மேற்கண்ட சாலைகளில், போக்குவரத்து மாற்றத்திற்காக, வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் தகுந்த முன்னேற்பாடுகளை செய்துகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
