'திருமணமான 5 மாதத்தில்'... ‘பைக்கில் சென்ற இளம் காவலருக்கு’... ‘நொடியில் நேர்ந்த பரிதாபம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Oct 23, 2019 04:00 PM

கன்னியாகுமரியில், பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில், இளம் காவலர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

government bus and bike met accident in kanyakumari one died

கன்னியாகுமரி மாவட்டம் நட்டாலம் அருகே உள்ள சாரோடுகோணம் பகுதியைச் சேர்ந்தவர் காட்வின் டோனி (28). இவர், நாகர்கோவில் ஆயுதப்படையில், முதலாம் அணியில் காவலராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி ஆஷா. இவர்களுக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்து முடிந்திருந்தது. இந்நிலையில் காவலர் காட்வின் டோனி, நாகர்கோவிலில் உள்ள காவல்நிலையம் செல்வதற்காக வீட்டில் இருந்து, இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். தக்கலையை அடுத்த புலியூர்குறிச்சி - கொல்லவிளை இடையே அவர் சென்று கொண்டிருந்தார்.

அப்போது திருச்செந்தூரில் இருந்து களியக்காவிளை நோக்கி, அரசுப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென அரசுப் பேருந்து, காவலர் காட்வின் டோனி வந்த இருசக்கர வாகனம் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் நிலை தடுமாறிய காவலர் காட்வின் டோனி பேருந்தின், பின் சக்கரத்தில் சிக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த தக்கலை போலீசார்,  காவலர் காட்வின் டோனியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காட்வின் டோனி உயிரிழந்ததை அறிந்து மருத்துவமனைக்கு ஓடிவந்து கதறி அழுத காட்சி, பார்ப்பவர்களை சோகத்தில் மூழ்க செய்தது. விபத்து தொடர்பாக காட்வின் டோனியின் மனைவி ஆஷா தக்கலை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பேருந்து ஓட்டுநர் காப்பிக்காட்டைச் சேர்ந்த கருணாகரனை (49) கைது செய்தனர். திருமணமான 5 மாதத்தில் காட்வின் டோனி உயிரிழந்த சம்பவம், அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags : #KANYAKUMARI #ACCIDENT #BIKE #POLICE #NEWLYMARRIED