பிசியாக இருந்த மனைவியின் செல்ஃபோன்... கேள்வி கேட்ட கணவனுடன் தகராறு.. கத்திரிகோலை எடுத்து கணவன் செய்த வெறிச் செயல்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Feb 11, 2020 03:54 PM

தஞ்சை மாவட்டம் ஒருத்த நாடு அருகே குடும்ப தகராறு காரணமாக காதல் மனைவியை கத்திரிக்கோலால் குத்திக் கொன்ற கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.

A husband who stabbed his wife with scissors

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஆம்பலாப்பட்டு வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் இளையராஜா. இவருக்கும் இவருடைய மனைவி சங்கீதாவுக்கும்  17 வயதில் ஒரு மகனும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இளையராஜா சென்னையில் தங்கி வேலை பார்த்து வந்தார். சங்கீதா தனது தாய் வீட்டில் மகன்-மகளுடன் வசித்து வந்தார்.

இளையராஜாவுக்கும், அவரது மனைவி சங்கீதாவுக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் இருந்த இளையராஜா தனது மனைவி சங்கீதாவை செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது சங்கீதாவின் செல்போன் எண் பிசியாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த இளையராஜா  சிறிது நேரத்துக்கு பின்னர் மீண்டும் தனது மனைவியை செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது கணவன்-மனைவி இடையே செல்போனில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த இளையராஜா, சென்னையிலிருந்து கிளம்பி சொந்த ஊருக்கு சென்றார். நேற்று முன்தினம் மாலை தனது மாமியார் வீட்டுக்கு சென்ற அவர், தனது மனைவி சங்கீதாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த இளையராஜா அருகிலிருந்த கத்திரிக்கோலை எடுத்து தனது மனைவியை குத்திக் கொன்றதாகத் தெரிகிறது. இதில் படுகாயமடைந்த சங்கீதாவை அக்கம்பக்கத்தினர் காப்பாற்றி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பாப்பாநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து இளையராஜாவை வலைவீசி தேடி வருகின்றனர்.

 

Tags : #THANJAVUR #HUSBAND STABBED #WIFE #MURDER