'கொரோனா' விவகாரத்தில்... தொடர்ந்து 'மவுனம்' காக்கும் நாடு... 'இறுதியில்' வெளியான ரகசியம்?...
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸால் தங்கள் நாட்டில் இதுவரை ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை என்று வடகொரியா தெரிவித்து வரும் நிலையில், அங்கு 400 பேருக்கு மேல் பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக தென்கொரியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இதில் 10 லட்சத்து 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் கொரோனா தாக்கத்தால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு உலகமே இப்படி திணறிக்கொண்டு இருக்கும் போது வடகொரியா மட்டும் தங்கள் நாட்டில் கொரோனா வைரஸால் யாரும் பாதிக்கப்படவில்லை கூறியுள்ளது.
கடந்த ஜனவரி மாதமே வடகொரியா தங்கள் எல்லைகளை மூடிவிட்டதாக தெரிவித்துள்ளது. தங்கள் நாட்டில் இருந்து யாரும் வெளியேற கூடாது என்றும் வெளி நாடுகளிலிருந்து யாரும் உள்ளே வரக்கூடாது என்றும் கடுமையான உத்தவுகளை கிம் ஜாங் உன் பிறப்பித்துள்ளார். சீனாவுடன் மொத்தமாக ஏற்றுமதி இறக்குமதியையும் அந்நாடு நிறுத்திக் கொண்டது.
அதேபோல் வெளிநாட்டு வாழ் மக்கள் தங்கள் நாட்டில் இருந்தால் அவர்களை உடனே வெளியேற்றியது. டிசம்பருக்கு பின் தங்கள் நாட்டிற்குள் வந்த அனைவரையும் வெளியேற்றி எல்லைகளை சீல் வைத்தது. இதுதான் வைரஸ் பரவாமல் இருக்க காரணம் என அந்நாடு தெரிவித்துள்ளது.
இதனிடையே அண்டை நாடான தென்கொரியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வடகொரியாவில் மட்டும் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என கூறுவது உலகநாடுகளை சந்தேகத்திற்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில், வடகொரியாவில் 400 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தென்கொரியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உலகிலேயே ஊடக சுதந்திரத்தை 100 சதவீதம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வடகொரியாவில் இதுகுறித்த உண்மைகள் எதுவும் வெளியாகவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர் சுட்டக் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இதன் மூலம் வடகொரியா எதை மறைக்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
