நிர்பயா வழக்கு: ‘4-வது முறையாக தூக்குத் தண்டனை தேதி அறிவிப்பு’... டெல்லி நீதிமன்றம் அதிரடி!
முகப்பு > செய்திகள் > இந்தியாநிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேரையும், வரும் மார்ச் 20-ம் தேதி காலை 5.30 மணியளவில் தூக்கிலிட வேண்டும் என டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே தூக்குலிடப்படும் தேதி அறிவிக்கப்பட்டு, பின்னர் குற்றவாளிகளின் கருணை மனு, மேல்முறையீடு உள்ளிட்ட காரணங்களால் 3 முறை தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தார்.
இதையடுத்து குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிடும் புதிய தேதியை அறிவிக்கக் கோரி திகார் சிறை நிர்வாகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த டெல்லி நீதிமன்றம் குற்றவாளிகளை மார்ச் 20-ந் தேதி காலை 5.30 மணிக்கு தூக்கிலிட உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இளம்பெண் ஒருவர், ஓடும் பேருந்தில் 6 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அதன்பின் படுகாயமடைந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சிறார் என்பதால் அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. மீதமுள்ள 5 பேரில் ராம் சிங் என்பவர் சிறையில் தற்கொலை செய்துகொண்டார். மீதமுள்ள 4 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
