'பால் வாங்க சென்ற 15 வயது சிறுவன்'... ‘அவனுக்கு ஏன் இப்டி நடக்கணும்'... 'கதறித் துடிக்கும் குடும்பம்'!
முகப்பு > செய்திகள் > இந்தியாபால் வாங்கச் சென்ற 15 வயது சிறுவன் டெல்லி கலவரத்தில் சிக்கி, மண்டை ஓட்டில் குண்டுகள் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் வடகிழக்குப் பகுதியான Brahmpuri-யைச் சேர்ந்த 15 வயது சிறுவன் இத்மினான் அகமது (Itminaan Ahmad). கடந்த செவ்வாய்கிழமை மாலை பால் வாங்குவதற்காக வீட்டை விட்டு வெளியேறியுள்ளான். ஆனால் கடைக்குச் சென்ற சிறுவன் வெகுநேரமாகியும் திரும்பவில்லை. இந்நிலையில், மாலை 5.30 மணியளவில் உங்களது மகன் அகமது, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக வந்த ஃபோன் காலால் குடும்பத்தினர் பதறியடித்து அன்வர் மருத்துவமனைக்கு ஓடிச் சென்றனர்.
அங்குப் போய் பார்த்தபோது டெல்லி கலவரத்தில் சிக்கிய சிறுவன் அகமது தலையில் பட்ட குண்டுகள் மண்டையோட்டை துளைத்துச் சென்று கவலைக்கிடமான நிலையில் இருந்துள்ளான். எப்படியும் பிழைத்து விடுவான் என்று நம்பியிருந்த குடும்பத்தினருக்கு, நள்ளிரவு 2 மணியளவில் சிறுவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அதிர்ச்சியளித்தனர்.
இதனைக் கேட்டு சிறுவனின் தாய் மற்றும் இரண்டு தங்கைகளும் கதறித் துடித்தனர். சிறுவனின் மாமா இர்ஷத் அகமது கூறுகையில், `வன்முறை நடந்த பகுதிக்கு எங்க பையன் எப்போது சென்றான் என எங்களுக்குத் தெரியாது. அவனுக்கு இப்படி நடக்கும் என நினைத்துப் பார்க்கவில்லை. ரொம்பவும் அமைதியான பையன். ஸ்கூல், வீடு என்றுதான் இருப்பான். நண்பர்களுடன் எல்லாம் வெளியில் சுற்றமாட்டான். அவனுக்கு ஏன் இப்படி நடந்தது எனத் தெரியவில்லை’ என்று கண்ணீர் மல்க கூறினார்.
‘ஸ்கூல் முடிஞ்சதும் நாங்க எப்பவும் கிரிக்கெட் விளையாடுவோம். ஸ்கூல் இல்லாததால நாங்க யாரும் வெளியவே வரல. கடைசியா நாங்க கடந்த வெள்ளிக்கிழமைதான் பார்த்துக்கொண்டோம். அவனுக்கு டாக்டர் ஆக வேண்டும் என்று கனவு. அதுக்கான கோச்சிங் க்ளாஸ் சேருவதற்கு முயற்சி செய்துகொண்டிருந்தான்’ என நண்பர்கள் கண்ணீர் வடித்தனர்.
சிறுவனின் இறுதிச்சடங்குகளில் பங்கேற்க ஏராளமானவர்கள் அவரது வீடு அமைந்திருந்த பகுதியில் திரண்டதால், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் மக்கள் வெள்ளத்தில் சிறுவன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
