‘40 ஆண்டுகளுக்கு முன் செய்த ஒரு காரியம்’.. ‘4 தலைமுறை ஆண்களை துரத்தி’.. ‘பலி வாங்கிய பரிதாபம்’..
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Saranya | Sep 12, 2019 04:56 PM
வாங்கிய கடனை அடைக்க முடியாமல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 தலைமுறை ஆண்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

பஞ்சாபின் பர்னாலா மாவட்டத்திலுள்ள போத்னா என்ற கிராமத்தைச் சேர்ந்த ஜோகிந்தர் சிங் என்பவர் 40 ஆண்டுகளுக்கு முன் விவசாயம் செய்வதற்காக ஊரில் சிலரிடமும், வங்கியிலும் வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். விவசாயத்தில் நஷ்டம் ஏற்படவே கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். பின்னர் அந்தக் கடன் அவருடைய மகன் பகவான் சிங்கைத் துரத்தியுள்ளது. அவரும் அந்தக் கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் 25 ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதையடுத்து அந்தக் கடனை திருப்பிக் கொடுக்க வேண்டிய பொறுப்பு அவருடைய மகன் குல்வந்த் சிங்கிற்கு வந்துள்ளது. கடன் கொடுத்தவர்கள் அவருக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுக்க வேறு வழியின்றி அவரும் தற்கொலை செய்துகொண்டுள்ளார். பின்னர் ஜோகிந்தர் சிங் வாங்கிய கடனுக்காக நான்காம் தலைமுறை வாரிசான குலவந்த் சிங்கின் மகன் லவ்ப்ரீத் சிங்கை கடன் கொடுத்தவர்கள் நெருக்கியுள்ளனர். இதனால் மன அழுத்தத்தில் இருந்த 22 வயதான லவ்ப்ரீத் சிங் நேற்று தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள லவ்ப்ரீத் சிங்கின் தாய், “கடனை அடைக்க முடியாத சோகமும், சகோதரிக்கு திருமணம் செய்து வைக்க முடியாத வேதனையுமே என் மகன் இந்த முடிவை எடுக்கக் காரணம். இப்போது எங்கள் குடும்பத்தின் கடைசி ஆண் வாரிசையும் இழந்துவிட்டோம். இன்னும் கடன் மட்டுமே 7 லட்சம் ரூபாய் வரை உள்ளது” எனக் கூறியுள்ளார். 40 ஆண்டுகளுக்கு முன் ஒருவர் வாங்கிய கடன் ஒரு குடும்பத்தின் 4 தலைமுறை ஆண்களை பலி வாங்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
