தனது 'செயல்பாட்டை' குறைத்துக் கொண்ட 'சூரியன்...' 'பூமிக்கு ஆபத்தா?...' 'விஞ்ஞானிகள் என்ன கூறுகின்றனர்?'

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | May 16, 2020 07:00 AM

சூரியன் தனது செயல்பாட்டை குறிப்பிட்ட அளவு குறைத்துக் கொண்டுள்ளதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

Scientists have discovered that the sun has reduced its activity

மனித இனத்தின் இருப்பிற்கு ஆதாரமாக விளங்கும் சூரியனில் குறிப்பிட்ட கால இடைவெளியில் நிகழும் ஒரு மாற்றம் தற்போது நிகழ்ந்துள்ளது.

பூமியிலிருந்து சுமார் 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சூரியனில் அணுக்கருச் இணைவு வினை சங்கிலித்தொடராக தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இதனால், உருவாகும் அபரிமிதமான ஆற்றல் பூமிக்கு வெப்பத்தை அளித்து வருகிறது. தற்போது சூரியனின் செயல்பாடு குறைந்துள்ளதால், பூமியின் வெப்பநிலையும் குறைய வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

200 ஆண்டுகளுக்கு முன்பு 1790க்கும் 1830க்கும் இடைபட்ட காலத்தில், இதேபோல் சூரியன் தனது உக்கிரத்தை குறைத்துக்கொண்டது. அப்போது, ஐரோப்பா மிகப்பெரிய காலநிலை மாற்றத்தை சந்தித்தது. லண்டனில் தேம்ஸ் நதி முதல்முறையாக முழுவதும் உறைந்துபோனது. கோடை காலத்தில் கடுமையான பனிப்பொழிவு நிகழ்ந்தது. இதனால், விவசாயம் பாதிக்கப்பட்டு மிகப்பெரிய பஞ்சமும் ஏற்பட்டது. ஏராளமானோர் உயிரிழந்தனர்.

1815ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி, இந்தோனேஷியாவில் மவுண்ட் தம்போரா என்ற எரிமலையில் அதுவரை உலகம் காணாத அளவில் மிகப்பெரிய வெடிப்பு ஏற்பட்டது. இதில் 70 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டனர். சூரியனின் செயல்பாடு குறைந்ததும், அதைத்தொடர்ந்து பூமியில் வெப்பநிலை குறைந்ததுமே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

பூமி உருவான போது பெரும் பனிக்காலம் நீடித்திருந்தது. அதன் சிறிய வடிவமாகவே இந்த நிகழ்வு பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது சூரியனில் ஏற்பட்டுள்ள மாற்றம் பூமியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்றே விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

ஒவ்வொரு 11 ஆண்டுக்கும் ஒருமுறை சூரியன் தனது செயல்பாட்டை குறைத்துக்கொள்வது வழக்கம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது சூரியனில் ஏற்பட்டுள்ள மாற்றம், புவியின் வெப்பநிலையை குறைக்கும் என்பது உண்மை என்றாலும், மற்றொரு பெரும் பனிக்காலத்தை ஏற்படுத்தும் அளவிற்கு அந்த மாற்றம் இருக்காது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.