“மனுஷ வாழ்க்கைய விட முக்கியமான வேற எதுலயாச்சும் சீன அதிபர் பிஸியா இருந்துருக்கலாம்!.. யாருக்கு தெரியும்?”.. வறுத்தெடுத்த 'பிரிட்டிஷ் எழுத்தாளர்'!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா தன் கோரப்பிடியில் உலகையே பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் இந்த கொரோனாவை சீனாவின் வுஹான் நகரத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே மர்ம காய்ச்சல் என்கிற பெயரில் மருத்துவர் ஒருவர், "வுஹானின் இறைச்சி கூடத்துக்கு அருகே வசிப்பவர்கள் நான்கு பேருக்கு ஒரே விதமான காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். எனவே நோயாளிகளை கையாளும் போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்" என்று எச்சரிக்கை விடுத்தார்.

ஆனால் அவர் கூறியது கண்டுகொள்ளப்படாமல் இருந்ததோடு அடுத்த மாதமான ஜனவரி மாதம் சீனா முழுவதும் இந்த நோய் பரவத் தொடங்கி இன்று உலகம் முழுவதும் இந்த நோய் தீவிரமாகி உள்ளது. இந்த மருத்துவரும் பிப்ரவரி மாதம் உயிரிழந்தார். அதன்பிறகு மக்கள் ஆயிரக்கணக்கில் கொத்துக்கொத்தாக கொரோனாவுக்கு பலியாகினர். உலகம் முழுவதும் பல நகரங்கள் லாக்டவுன் என்கிற பெயரில் இன்று முடக்கப்பட்டுள்ளன. சர்வதேச அளவிலான பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
இந்தநிலையில் பிரிட்டிஷ் எழுத்தாளரும் நகைச்சுவை கலைஞருமான பாட் காண்டல் இன்று உலகம் முழுவதும் இந்த நோய் இருப்பதற்கு சீனாதான் காரணம் என்று அதிரடியாக விமர்சித்துள்ளார். ஒரு கம்யூனிச அரசு திறம்பட கையாண்டிருக்கவேண்டிய இந்த விஷயத்தில், இந்த நோய்த்தொற்றை கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாகவும் தொடக்க காலத்தில் இந்த வைரஸ் தொடர்பாக பேசியவர்களை சீனா கைது செய்ததாகவும், வெளியில் இருந்து கிடைத்த உதவிகளையும் மறுத்துவிட்டதாகவும், மக்களின் உயிர்களை விட தங்களின் முகத்தை காத்துக் கொள்வதில்தான் சீனா உறுதியாக இருந்ததாகவும், ஆக உலகில் ஏற்படும் ஒவ்வொரு மரணத்துக்கும் சீனாவும், அந்நாட்டின் கட்சியும்தான் நேரடி காரணம் என்றும் பாட் காண்டல் கூறியுள்ளார்.
மேலும் உலகம் முழுவதும் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஐரோப்பாவே இப்போது நெருக்கடியில் உள்ளதாகவும், வுஹான் நகரத்தில் இருப்பது தெரிந்தும் சீன அதிபர் பொறுப்புடன் எதையும் செய்யாமல், மனித வாழ்க்கையை விட முக்கியமான வேறு விவகாரங்களில் அவர் பிஸியாக இருந்திருக்கலாம்.. யாருக்கு தெரியும் என்றும் கூறி பாட் காண்டல் “இதை வுஹான் வைரஸ் அல்லது ட்ரம்ப் சொல்வது போல சீன வைரஸ் என்றுதான் அழைக்க வேண்டும், ஒரு விஷயத்தை அதன் சரியான பெயரில் அழைப்பதுதான் முக்கியம் என்று சீன தத்துவமேதை கன்ஃபூசியஸ் கூறுகிறார். இந்த விவகாரத்தை மறைத்தால் உலகமே முடங்கி விடும் எனத் தெரிந்தும் மறைத்துள்ளனர். அப்படியானால் அவர்கள் எவ்வளவு பொறுப்பற்றவர்களாகவும் நேர்மையற்றவர்களாகவும் இருந்துள்ளனர். இவர்கள் உலகின் பார்வையில் சீனாவை தலை குனிய வைத்து விட்டார்கள்” என்றும் விமர்சித்துள்ளார்.
