கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் கடுமையாக அச்சுறுத்தி வரும் நிலையில், வைரஸை எரித்து சாம்பலாக்க திட்டம் ஒன்று தன்னிடம் உள்ளதாக உலகின் முன்னணி வியாபாரியும், தொழிலதிபருமான மூசா பின் ஷம்ஷர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் மூலம் உலகம் முழுவதும் மிக மோசமான பாதிப்பை அடைந்துள்ளது. அதிலும் குறிப்பாக அமெரிக்கா கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் தடுப்பு மருந்தை உருவாக்கும் பணியில் உலக நாடுகள் மும்முரமாக செயலாற்றி வருகின்றன. அதே நேரம் மருந்து கிடைத்தாலும், அது பயன்பாட்டிற்கு வர சிறிது கால அவகாசம் தேவைப்படலாம்.
இந்நிலையில் கொரோனா வைரசை 100 மணி நேரத்திற்குள் எரித்து சாம்பலாக்கும் திட்டம் ஒன்று தன்னிடம் உள்ளதாக வங்காளதேசத்தை சேர்ந்த தொழிலதிபர் மூசா பின் ஷம்ஷர் அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், 'ஆபத்தான ஆயுதங்களை விட கொரோனா வைரஸை பயங்கரமானதாக கருதி அதனை அழிக்க உலக விஞ்ஞானிகள் முன்வர வேண்டும். அணு அல்லது யுரேனியம் சாம்பலை செல்பார் சாம்பலுடன் சேர்த்து ஒருவித தடினமான புகையை நாசாவால் உருவாக்க முடியும். அதில் மனித உடல்நல கேடுகளை தவிர்க்க விஞ்ஞானிகள் வேறு சிலவற்றை சேர்க்க வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 'அமெரிக்க விமானப்படை போர் விமானங்கள் மூலம் 10,000 அடி உயரத்தில் இருந்து உருவாக்கப்பட்ட அந்த புகையை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும். கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவது குறித்து உலக தலைவர்களுக்கு எதுவும் தெரியாது. அதே நேரம் எனது ஆலோசனையை கேட்டு நடந்தால் இந்த உலகம் அழிவிலிருந்து தப்பித்துக் கொள்ளும். உங்களால் (டிரம்ப்) மட்டுமே இந்த உலகத்தையும் மனிதநேயத்தையும் காப்பாற்ற முடியும்' என அந்த கடிதத்தில் மூசா குறிப்பிட்டுள்ளார்.
