பசித்த மனுஷனுக்கு சாப்பாடு தானே எல்லாம்...! '600 பேருக்கு சாப்பாடு போடுறோம்...' 152 வருசமா எரியும் வள்ளலாரின் அணையா அடுப்பு...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சுமார் 150 வருடங்களுக்கு மேலாக, பேரிடர் காலங்களிலும் 600க்கும் மேற்பட்டோருக்கு உணவளிக்கும் வள்ளலார் உருவாக்கிய வடலூரின் அணையா அடுப்பு.

1867ல் மார்ச் 23ம் தேதி வடலூரில் உள்ள தரும சாலைக்கு வரும் நபர்களுக்கு மூன்று வேளையும் உணவு கிடைக்கும் எனக்கூறி வள்ளலார் அடுப்பை ஏற்றி வைத்தார். அன்று அவர் ஏற்றிய அடுப்பு இன்று வரை தினமும் சுமார் 600க்கும் மேற்பட்டோருக்கு உணவளித்து வருகிறது. பேரிடர் காலங்கள் உட்பட இந்த கொரோனா ஊரடங்கு காலத்திலும் சமூக இடைவெளியை பின்பற்றி உணவளித்து வருகின்றனர் தருமசாலை நிர்வாக அதிகாரிகள்.
பல கோவில்களில் அன்னதானங்கள் நிறுத்தப்பட்ட நிலையில், உணவகங்களில் சாப்பிட முடியாத நிலையில் இருக்கும் மக்கள் தருமசாலையை நம்பியே வாழ்கின்றனர் மேலும் பலரும் சத்திய தரும சாலையில் தங்கியுள்ளனர் என கூறுகின்றனர் நிர்வாக அதிகாரிகள். அரசு வலியுறுத்துவதை போல அங்கு வரும் அனைவரையும் முகக்கவசம் அணியச்சொல்கிறோம். இங்கு தங்கி சாப்பிடும் நபர்களுக்கு புதிதாக தட்டு வழங்கியும் உள்ளனர்.
எந்த நேரத்திலும் சுமார் ஆறு மாதங்களுக்கு தேவையான அரிசி மற்றும் பருப்பு போன்றவற்றை சேமிப்பில் வைத்திருப்பதால், தொடர்ந்து உணவு வழங்கமுடிகிறது என்கிறார் அவர். ''அரிசி, பருப்பு உண்டியல் உள்ளது. பலரும் இங்கு அரிசி மூட்டைகளை அனுப்புவார்கள். விவசாயிகள் விளைச்சல் எடுத்ததும், தங்களால் முடிந்த பங்கை இங்கு செலுத்துவார்கள். தற்போது இங்குள்ளவர்களுக்கு டோக்கன் தருகிறோம். கொரோனா பரவலை தடுக்கும் விதமாக இடைவெளி விட்டு உணவை வாங்கி செல்கிறார்கள்,'' என்றார்.
''வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்பது வள்ளலாரின் பிரபலமான வாக்கியம். பசித்த மனிதனுக்கு உணவு தானே முக்கியம். உணவு ஒரு மனிதனுக்கு எவ்வளவு அடிப்படையானது என உணர்ந்தே மக்களுக்கு சேவையாற்றும் வகையில் சுமார் 152 வருடங்களுக்கு மேலாக இந்த தொண்டினை தன்னலமற்று செய்து வருகின்றனர் வடலூர் தருமசாலை நிர்வாகிகள்.
வடலூரின் அணையா அடுப்பு சாலைகளில் இருக்கும் ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், நடைபயணம் செல்பவர்கள் என பலருக்கும் உணவு வழங்கப்படுகிறது.

மற்ற செய்திகள்
