'ஆஃபீஸ்க்கு போகலாம்ன்னு பாத்தோம்'... 'ஆனா இவ்வளவு தூரத்துக்கு நிக்குதா'?... விழிபிதுங்கிய சென்னை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Jan 20, 2020 09:41 AM

பொங்கல் பண்டிகையை முடித்து கொண்டு ஏராளமானோர் சென்னை திரும்புவதால், சென்னை புறநகர் மற்றும் மாநகர சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பல சுங்க சாவடிகளில் வாகனத்தை நிறுத்தாமல் காவல்துறையினர் அனுப்பி வைத்தார்கள்.

Traffic hit as Chennaiites return after long Pongal weekend

வருடத்தில் பொங்கல் பண்டிகைக்கு தான் தொடர் விடுமுறை இருக்கும் என்பதால், சென்னையில் வசிக்கும் பல லட்சக்கணக்கான மக்கள் தங்களின் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இதனால் சென்னை மாநகரமே காலியானது என சொல்லும் அளவிற்கு கடந்த சில நாட்களாக சென்னை வெறிசோடி காணப்பட்டது. இந்நிலையில் பொங்கல் பண்டிகை முடிந்து பலரும் சென்னைக்கு திரும்புகின்றனர். இதனால் சென்னைக்கு பெரும் அனைத்து நெஞ்சாலைகளும் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தது.

குறிப்பாக தென் தமிழகத்தில் இருந்து சென்னைக்கு வரும் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டை, மதுராந்தகம் சுங்க சாவடிகளில் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் பல மணிநேரம் காத்து நின்றன. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து சில இடங்களில் சுங்க சாவடிகளை கட்டணம் செலுத்தாமலேயே போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் வேலூர், வாணியம்பாடி சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மிக கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே சென்னை வருபவர்களின் முக்கிய சந்திப்பான பெருங்களத்தூர் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சென்னை புறநகரில் இருந்து சென்னை நகருக்குள் செல்வதற்கே பல மணிநேரம் ஆனது. வாகனங்கள் நகர முடியாத அளவிற்கு போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இதே நிலை தான் தாம்பரம் பகுதியிலும் நீடித்தது. இதனால் மதுரவாயல் பைபாஸ் சாலையை வந்து சேர்வதற்குள் வாகனங்கள் ஒரு வழியாகிவிட்டது.

இதற்கிடையே நேற்று தென் மாவட்டங்களில் இருந்து கிளம்பியவர்கள் இன்று சென்னையை அடைந்து, காலையில் அலுவலகத்திற்கு சென்று விடலாம் என திட்டம் போட்டிருந்தார்கள். ஆனால் கடுமையான போக்குவரத்து நெரிசலில் காரணமாக அவர்களால் குறிப்பிட்ட நேரத்தில் சென்னையை அடைய முடியவில்லை. இதனால் அலுவலகத்திற்கு செல்ல முடியத நிலையில் இருப்பதாக புலம்பி கொண்டே சென்றார்கள்.

Tags : #TRAFFIC #PONGAL HOLIDAYS #CHENNAI #CHENNAIITES