VIDEO: ‘பைக்கை நிறுத்திய போலீசார்’.. ‘ஆக்ரோஷமாக’ பேரிகார்டை முட்டி தள்ளிய இளைஞர்.. தேனியில் பரபரப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்போலீசார் வாகன சோதனை மேற்கொண்டபோது இளைஞர் ஒருவர் பேரிகார்டில் ஆக்ரோஷமாக முட்டிக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தேனி மாவட்டம் அல்லிநகரம் அடுத்த பொம்மையகவுண்டன்பட்டி தேனி-பெரியகுளம் சாலையில் உள்ள பிள்ளையார் கோவில் அருகே போலீசார் பேரிகார்டு அமைத்து வாகன சோதனையில் ஈடுப்பட்டு வந்தனர். அப்போது லெட்சுமிபுரத்தை சேர்ந்த தினகரன் (26) என்ற இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டு இருந்துள்ளார். அப்போது சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போலீசார் தினகரனை நிறுத்தி எங்கே சென்று வருகிறீர்கள்? என விசாரித்துள்ளனர்.
இதில் ஆத்திரமடைந்த இளைஞர் அருகில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை தள்ளிவிட்டுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார், ஏன் இப்படி செய்கிறீர்கள்?, காரணம் இல்லாமல் வெளியே சுற்றலாமா? எனக் கேட்டுள்ளனர். இதற்கு ஆத்திரமடைந்த அந்த இளைஞர் சாலையின் நடுவே இருந்த பேரிகார்டை தலையால் முட்டி கீழே தள்ளிவிட்டு, பக்கத்தில் இருந்த மற்றொரு பேரிகார்டில் தலையை முட்டி காயம் ஏற்படுத்த முயன்றுள்ளார்.
இவை அனைத்தையும் அருகில் இருந்த ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில் அந்த இளைஞர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊரடங்கை மீறி வெளியே சுற்றியதால் அந்த இளைஞரின் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.
