'தமிழகத்தை அதிரவைத்த 15 கோடி மதிப்பிலான செல்போன் கொள்ளை'... 'ஹவாலா பணம், துபாய் தொடர்பு'... ஹாலிவுட் கிரைம் திரில்லரை போன்ற பகீர் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Dec 08, 2020 01:26 PM

கிருஷ்ணகிரியில் லாரியில் சென்ற 15 கோடி ரூபாய் மதிப்பிலான புத்தம் புதிய செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், சர்வதேச கும்பலுக்குத் தொடர்பு இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Dubai gang involved in 15 crore worth cellphone robbery

காஞ்சிபுரத்திலிருந்து மும்பை நோக்கி கன்டெய்னர் லாரியில் கொண்டு செல்லப்பட்ட 15 கோடி ரூபாய் மதிப்பிலான 13 ஆயிரத்து 920 செல்போன்களை கடந்த 21ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் மேலுமலை அருகே மர்ம கும்பல் ஒன்று வழிமறித்துக் கொள்ளையடித்துச் சென்றது. இந்த கொள்ளை சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த கொள்ளைக் கும்பலைப் பிடிக்கக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் தலைமையிலான 20 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் டெல்லி, மத்திய பிரதேசம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தனிப்படை போலீசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் முக்கிய குற்றவாளியான மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ராஜேந்தர் உட்பட 10 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ஆந்திரா மாநிலத்தில் கொள்ளையடிக்கப் பயன்படுத்திய இரண்டு லாரிகளும், தமிழக கொள்ளையில் பயன்படுத்திய இரண்டு லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதனிடையே போலீசார் நடத்திய விசாரணையில் இந்த கொள்ளை சம்பவத்தில் சர்வதேச கும்பலுக்குத் தொடர்பு இருக்கும் தகவல் போலீசாருக்கு கடும் அதிர்ச்சியைக் கொடுத்தது. அதில், ''கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செல்போன்களை கொள்ளையடித்த கொள்ளை கும்பல் தங்கள் லாரிகளில் 33 முறை நம்பர் பிளேட்டை மாற்றி மத்தியப் பிரதேச மாநிலம் போபால் சென்றுள்ளனர்.

பின்னர் அங்கிருந்து 2000 செல்போன்கள் வீதம் பிரித்து டெல்லி, கொல்கத்தா, மும்பை, கவுகாத்தி, ராய்பூர் பகுதிகளுக்கு விமானம் மூலம் அனுப்பி விட்டு, பின்னர் அனைத்து செல்போன்களையும் அந்த பகுதியிலிருந்து திரிபுரா மாநிலத்திற்கு வாகனங்களில் கொள்ளை கும்பல் அனுப்பியுள்ளது. திரிபுரா வந்த செல்போன்களை சாலை மார்க்கமாக பங்களாதேஷ் நாட்டிற்கு அந்த கொள்ளை கும்பல் அனுப்பியுள்ளது. பின்னர் அதற்கான தொகையாக ஆறரை கோடி ரூபாயை ஹவாலா பணமாகத் துபாயைச் சேர்ந்த அப்பாஸ் என்பவரிடமிருந்து அந்த கும்பல் பெற்றுள்ளது.

தமிழகம், மத்தியப் பிரதேசத்தைக் கடந்து பங்களாதேஷ், துபாயைச் சேர்ந்த கொள்ளைக் கும்பலும் இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளதால் மேலும் 15க்கும் மேற்பட்ட குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டிய சூழல் உள்ளதாகவும், முக்கிய குற்றவாளியான துபாயைச் சேர்ந்த அப்பாஸ் என்பவனைக் கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர் தெரிவித்தார்.

இதனிடையே சர்வதேச அளவில் திட்டமிடப்பட்டு நடைபெற்ற இந்த கொள்ளைச் சம்பவத்தைச் சாமர்த்தியமாகச் செயல்பட்டு ஒரு மாதத்தில் முக்கிய குற்றவாளிகளைக் கைது செய்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் தலைமையிலான தனிப்படை குழுவினருக்குப் பாராட்டுத் தெரிவித்தார்.

சர்வதேச கும்பல் சம்பந்தப்பட்டுள்ள இந்த கொள்ளை சம்பவத்தில், அப்பாஸ் கைது செய்யப்படும் பட்சத்தில் இந்த கொள்ளை சம்பவத்தில் பின்னணியில் உள்ளவர்களின் முழு விவரம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Dubai gang involved in 15 crore worth cellphone robbery | Tamil Nadu News.