'ஏன்டா நான் உனக்கு 'அப்பா'வா, இல்ல 'கல்யாண புரோக்கரா'?... 'வில்லனாக மாறிய தந்தை'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Jeno | Jan 14, 2020 02:36 PM
திருமணம் செய்து வைக்க கூறி மகன் தகராறில் ஈடுபட்டதால், தந்தையே மகனை அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தர்மபுரி மாவட்டம், பொம்மிடி அருகே உள்ள மங்களம் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சின்ன பையன். விவசாயம் செய்து வரும் இவருக்கு, திருமணமாகி பச்சையம்மாள் என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியருக்கு இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில், இளைய மகன் கார்த்திக் திருமணம் ஆகி கோவையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மூத்த மகன் வெங்கடேசன் அவ்வப்போது பிரச்சனைகளில் ஈடுபடுவதால் அவர் மீது காவல்நிலையத்தில் வழக்குகள் உள்ளன.
இந்த காரணத்தினால் அவருக்கு திருமணம் நடைபெறுவது தள்ளிச்சென்று கொன்டே இருந்தது. இந்த சூழ்நிலையில், சமீபத்தில் அதியமான் கோட்டை பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில், கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார். இதனால் அவரது தந்தை சின்ன பையன், மிகவும் மன வருத்தத்தில் இருந்துள்ளார். மூத்த மகன் இப்படி உருப்படாமல் சென்று விட்டானே என, தனது மனைவியிடம் புலம்பி வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த தனது தந்தையிடம், சொத்தை பிரித்து தருமாறும், தனக்கு உடனடியாக திருமணம் செய்து வைக்குமாறும் கூறி தகராறில் ஈடுபட்டார். இதனால் கடுப்பான அவரது தந்தை, இப்படி கொலை வழக்கில் ஜெயிலுக்கு சென்று விட்டு வந்தவனுக்கு, யார் பொண்ணு கொடுப்பார்கள் என கேட்டுள்ளார். மேலும், நீ நினைத்தவுடன் பெண்ணை தேடுவதற்கு நான் ஒன்றும் கல்யாண தரகர் அல்ல, என கோபமாக பேசியுள்ளார்.
பிரச்னை எல்லை மீறி செல்ல, ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த சின்ன பையன் அருகில் கிடந்த மரக்கட்டையை எடுத்து வெங்கடேசனின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் படுகாயம் அடைந்த வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து இறந்தார். இதனிடையே சம்பவம் குறித்து அறிந்த பொம்மிடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வெங்கடேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தந்தைக்கும் மகனுக்கும் நடந்த பிரச்சனையில், பெற்ற மகனை தந்தையே அடித்துக்கொன்ற பயங்கர சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
