இன்று முதல் 'தமிழ்நாட்டில்' 144 தடையுத்தரவு... இதெல்லாம் 'கண்டிப்பா' செய்யவே கூடாது... முழு விவரம் உள்ளே!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Mar 24, 2020 12:45 AM

கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் தமிழக அரசு மார்ச் 24-ம் தேதி மாலை 6 மணி தொடங்கி ஏப்ரல்   1-ம் தேதி காலை 6 மணி வரை தமிழகம் முழுவதும் தடையுத்தரவு பிறப்பிக்கப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன் முழுவிவரங்களை கீழே காணலாம்.

Coronavirus: 144 ban Imposed from today onwards in Tamil Nadu

* மார்ச் 1-ம் தேதிக்குப் பிறகு வெளிநாட்டில் இருந்து தமிழகம் வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டியது கட்டாயம்

* பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே தங்கியிருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். அத்திவாசியத் தேவைகளுக்காக மட்டுமே வெளியில் வரவும், அப்படி வரும்போது ஒரு மீட்டர் அல்லது 3 அடி இடைவெளி இருக்குமாறு பார்த்துக்கொள்வது அவசியம்.

* பொது இடங்களில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவது தடை செய்யப்படுகிறது.

* அனைத்துக் கடைகள், வணிக வளாகங்கள், டாஸ்மாக் கடைகள் மூடப்படும்.

* குறிப்பிட்ட முக்கிய அலுவலகங்களைத் தவிர மற்ற அரசு அலுவலங்கள் மூடப்படும்

* தனியார் பேருந்துகள், வாடகை வாகனங்கள், ஷேர் ஆட்டோக்கள், ஆட்டோக்கள், மெட்ரோ சேவை, அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகள், மாநில அரசின் கீழ் வரும் போக்குவரத்து சேவைகள் உள்ளிட்டவைகள் இயங்க அனுமதியில்லை. தடை உத்தரவில் இருந்து விலக்கு பெற்ற வாகனங்கள் மட்டும் இயங்க அனுமதி.

* அண்டை மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள் இடையிலான போக்குவரத்துக்கு அனுமதி இல்லை.

* கல்வி நிலையங்களில் பணிபுரிபவர்கள் அனைவரும் மார்ச் 31-ம் தேதி வரை வீட்டிலிருந்து பணிபுரிய அறிவுறுத்தப்படுகிறார்கள். மருத்துவம் மற்றும் அந்தத் துறை சார்ந்து இயங்கும் கல்லூரிகள் உள்ளிட்டவைகளுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

விலக்கு அளிக்கப்படும் அரசு துறைகள்:

* போலீஸ்

* சுகாதாரத்துறை

* தீயணைப்புத் துறை

* சிறைத்துறை

* பொதுவிநியோகத் துறை

* மின்சாரத்துறை

* குடிநீர் வழங்கல் துறை

* உள்ளாட்சி நிர்வாகம் தொடர்பான துறைகள்.

* கருவூலத் துறை

* வங்கிகளின் ஏடிஎம் இயந்திரங்களின் செயல்பாடு தொடர்பான ஊழியர்கள்

* ஆவின் பால் விற்பனையகங்கள், அம்மா உணவகங்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் வழக்கம்போல் செயல்படும்

* போக்குவரத் துறை மற்றும் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் துறைகள்

விலக்களிக்கப்பட்டுள்ள தனியார் துறைகள்:

* மருத்துவமனைகள் மற்றும் அதுசார்ந்து செயல்படும் துறைகள்\கடைகள்\நிறுவனங்கள்

* அத்தியாவசிய உணவுப் பொருள் விற்பனை நிலையங்கள் (மளிகை, காய்கறி, முட்டை, இறைச்சி, மீன் விற்பனை செய்யும் கடைகள்)

* பால் மற்றும் பால் பொருள்கள் உற்பத்தி மற்றும் விற்பனை சார்ந்த நிறுவங்கள்\கடைகள்

* வங்கிகள் மற்றும் ஏடிஎம்கள்

* பத்திரிகைத் துறை சார்ந்த நிறுவனங்கள்

* ஐ.டி மற்றும் நிதி சேவைகள் சார்ந்து இயங்கும் நிறுவனங்கள், தங்கள் ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே வேலை பார்ப்பதை உறுதி செய்ய வேண்டும். அது முடியாத பட்சத்தில், அத்தியாவசிய சூழ்நிலையில், போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு செயல்படலாம்.

* காய்கறிகள், உணவுப்பொருள்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் மற்றும் கிடங்குகள் செயல்பட அனுமதி

* உணவகங்கள், பார்சல் மட்டுமே விற்பனை செய்ய அனுமதிக்கப்படுகின்றன. உணவகங்களில் அமர்ந்து உணவு உண்ண அனுமதி இல்லை.

* பெட்ரோல் நிலையங்கள், கேஸ் ஆகியவற்றிற்கும் அனுமதி.

* ஏற்கெனவே அறிவித்தபடி, அங்கன்வாடிகள், பள்ளிகள், கல்லூரிகள், அரசு விடுதிகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள், தீம் பார்க்குகள், பூங்காக்கள், நீச்சல் குளங்கள், ஜிம், மிருகக் காட்சி சாலைகள், அருங்காட்சியகங்கள், நூலகங்கள், சுற்றுலா விடுதிகள், சுற்றுலாத் தலங்கள், கடற்கரைகள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மூடப்பட்டே இருக்கும்.

* அனைத்துவிதமான மத வழிபாட்டுத் தலங்களும் மூடப்படும்.

*24.3.2020 அன்று நடத்தத் திட்டமிட்டிருந்த பிளஸ் 2 தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். அதேநேரம், 26.03.2020 அன்று நடத்தத் திட்டமிட்டிருந்த பிளஸ் 1 தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன. அனைத்து கல்லூரி, வேலைவாய்ப்புத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுகின்றன.

* மார்ச் 16-ம் தேதிக்கு முன்பாகத் திட்டமிடப்பட்டிருந்த திருமணங்கள் உரிய அனுமதியுடன் 30 பேருக்கு மிகாமல் திருமண மஹால்களில் நடத்திக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. அதேபோல், ஒத்திவைக்கப்பட்ட திருமணங்களுக்காக ஏற்கெனவே கொடுக்கப்பட்டுள்ள முன்பணத்தை உரியவர்களிடம் திரும்ப அளிக்குமாறு அனைத்து திருமண மஹால் நிர்வாகத்தினர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்