BREAKING: கொரோனாவை தடுக்க 'தமிழகம் முழுவதும் நாளை முதல் 144 தடை உத்தரவு!'... பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் நாளை மாலை 6 மணிக்கு அனைத்து மாவட்ட எல்லைகளையும் முடக்கி, 144 தடை அமலுக்கு வரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் இதுவரை 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சியில் மட்டும் 3,000 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று குறித்தான போதிய விழிப்புணர்வு இல்லாமல், மக்கள் அதிக அளவில் பொதுவெளிகளில் நடமாடுகின்றனர் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, கொரோனாவைத் தடுக்க தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
நாளை மாலை 6 மணிக்கு தொடங்கும் இந்த 144 தடை, வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து மாவட்ட எல்லைகளையும் மூட முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
144 தடை உத்தரவின் சாராம்சங்கள் பின்வருமாறு:-
அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியே வர வேண்டும்.
மருந்து, காய்கறி, மளிகைக் கடைகள் செயல்பட எந்தத் தடையும் இல்லை. மாவட்ட எல்லைகள் மூடப்பட்டாலும் பால், காய்கறி, இறைச்சி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்ல எந்தத் தடையுமில்லை.
மருந்தகங்கள், அம்மா உணவகங்கள் வழக்கம்போல் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பேருந்துகள், டாக்சிகள், ஆட்டோக்கள் இயங்காது.
தனியார் நிறுவனங்கள், ஐ.டி. ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணி புரிய வேண்டும்.
வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் அரசின் தடுப்பு நடவடிக்கைகளை மீறினால் அதிகபட்சமாக பாஸ்போர்ட் முடக்கப்படும்.
கொரோனா அறிகுறியுடன் யாராவது இருந்தால் உடனடியாக அரசிற்கு தெரியப்படுத்த வேண்டும்.
ஏற்கெனவே நிச்சியிக்கப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்த காவல் துறையின் அனுமதி வாங்க வேண்டும்.
சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களை முடக்க மத்திய அரசு வலியுறுத்தியிருந்த நிலையில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் தற்போது முடக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
