42 வருஷ 'அனுபவத்துல' சொல்றேன்... அதெல்லாம் 'வேண்டாம்' ஜெகன்... ஆந்திர முதல்வருக்கு அட்வைஸ்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Manjula | Dec 26, 2019 06:45 PM
ஆந்திர முதல்வராக பணியேற்றது முதல் தொடர்ந்து பல்வேறு அதிரடி திட்டங்களை ஜெகன்மோகன் ரெட்டி அறிமுகப்படுத்தி வருகிறார். அதிரடியாக அவர் செயல்படுத்தும் திட்டங்கள் அனைத்தும் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.

அந்தவகையில் ஆந்திராவுக்கு விசாகப்பட்டினம், அமராவதி, கர்னூல் என 3 தலைநகரங்கள் அமைக்கப்பட உள்ளதாக ஜெகன் அறிவித்தார். இதுகுறித்து அவர், ''ஆந்திராவுக்கு விரைவில் மூன்று தலைநகரங்கள் உருவாக்கப்படலாம். விசாகப்பட்டினம் நிர்வாக தலைநகரமாகவும் அமராவதி சட்டமன்றத் தலைநகராகவும் கர்னூல் சட்ட (நீதிமன்றம்) தலைநகரமாகவும் செயல்படும்,'' என்றார்.
இதற்கு பொதுமக்கள் மத்தியில் ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர எழுந்தன. பதிலுக்கு அனைத்து மக்களுக்கும் முன்னுரிமை அளிக்கும் வகையில் 3 தலைநகரங்கள் உருவாக்கப்பட உள்ளதாக ஜெகன் விளக்கம் அளித்திருந்தார்.
இந்தநிலையில் குடியரசு துணைத்தலைவர் வெங்கைய நாயுடு, ''தலைநகரை மையப்படுத்தித்தான் ஒரு மாநிலத்தின் நிர்வாகம் இருக்க வேண்டும். சட்டமன்றம், நீதிமன்றம், நிர்வாகம் போன்ற அனைத்தும் ஒரே இடத்திலேயே இருக்க வேண்டும். இதை எனது 42 வருட அரசியல் அனுபவத்தின் மூலம் கூறுகிறேன். ஆந்திரா இரண்டாக பிரிக்கப்பட்ட பின்னர் வளர்ச்சி ஏற்பட்டிருப்பதை கண்டேன். ஆனால் அனைத்து செயல்பாடுகளும் ஒரே இடத்தில் தான் இருக்க வேண்டும்.
எனவே ஜெகன்மோகன் ரெட்டி தன்னுடைய முடிவை மாற்றி ஆந்திராவுக்கு ஒரே தலைநகரை அறிவிக்க வேண்டும்,'' என வலியறுத்தி இருக்கிறார்.
