பர்ஸ்ட் 'பூத்'ல போங்க ... அடுத்து உங்க வேலைய பாருங்க ... கொரோனாவைத் தடுக்க கேரள அரசின் 'பிரேக் தி செயின்'!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் கொரோனா வைரஸ் தீவிரமடைவதையொட்டி 'பிரேக் தி செயின்' என்ற திட்டத்தை கேரள அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் வரை கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக கேரள மாநிலத்தில், அதிகபட்சமாக 21 பேர் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. 14,944 பேர் கண்காணிப்பில் உள்ளனர். மேலும், 259 பேர் மருத்துவமனையின் கண்காணிப்பில் உள்ளனர்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க 'பிரேக் தி செயின்' என்ற திட்டத்தை கேரள சுகாதாரத்துறை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா கூறுகையில், 'கொரோனா வைரஸ் தொற்று, சங்கிலி தொடர் போல் பரவி வருகிறது. இந்த சங்கிலியை தடுக்க 'பிரேக் தி செயின்' என்ற திட்டத்தை ஏற்படுத்தியுள்ளோம். இதன்படி அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் நுழைவுப்பகுதியில் `பிரேக் தி செயின்' பூத் ஒன்றை ஏற்படுத்த வேண்டும். நிறுவனத்திற்குள் நுழையும் ஒவ்வொருவரும் அந்த பூத்தில் சென்று தங்களது கைகளை கழுவிக் கொண்டோ அல்லது ஹேண்ட் சானிட்டிசர் பயன்படுத்திக் கொண்டோ உள்ளே நுழைய வேண்டும். இதன் மூலம் ஒருவரிடம் இருந்து பிறருக்கு பரவுவதை தடுக்க முடியும்' என தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தில் மாஸ்க் தட்டுப்பாடு நிலவி வருவதால் சிறையிலுள்ள கைதிகளை பயன்படுத்தி கேரள அரசு மாஸ்க்குகளை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
