'10 நாளில் காற்று மாசை கட்டுப்படுத்திய கொரோனா...' '25 வருடங்களுக்குப் பிறகு...' 'கண்ணுக்குத்' தெரிந்த 'இமயமலை'.. 'புத்துயிர்' பெற்ற 'இயற்கை!...' 'வைரல் புகைப்படங்கள்...'

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Apr 06, 2020 10:54 AM

நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், காற்று மாசு வெகுவாக குறைந்துள்ளதையடுத்து, 25 ஆண்டுகளாக கண்ணுக்கு தெரியாமல் மறைந்திருந்த இமயமலையின் அழகு தற்போது தெரிய ஆரம்பித்துள்ளது.

Corona Curfew Air Pollution Decrease-Visible Himalayas

பிரதமரின் அறிவிப்பைத் தொடர்ந்து நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிப் போயுள்ளனர். வாகனப் போக்குவரத்து பெரும்பாலும் முடங்கிப் போயுள்ளது. விமானங்கள், ரயில் போக்குவரத்து போன்றவை பெரும்பாலான பகுதிகளில் நிறுத்தப்பட்டு விட்டன. வாகனப் போக்குவரத்து வெகுவாக குறைந்துள்ளதால் காற்று மாசு  கணிசமாக சரிந்துள்ளது. ஒலி மாசு முற்றிலும் குறைந்துள்ளது. இதனால் இயற்கை புத்துயிர் பெற்றுள்ளது.

ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் பெரும்பாலான தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், அவற்றிலிருந்து வெளியாகும் கழிவு நீர் நீர்நிலைகளில் கலப்பது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவின் முக்கிய நதிகள் தூய்மையடைந்துள்ளன.

காற்று மாசால் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள நகரங்கள் அனைத்திலும் தற்போது காற்று மாசு எதிர்பாராத அளவு குறைந்துள்ளது.

இந்நிலை பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் பகுதியில் காற்று மாசு வெகுவாக குறைந்ததையடுத்து, அப்பகுதி மக்கள் உற்சாகமடைந்துள்ளனர். இதனால் இமயமலையின் எழில்மிகு தோற்றம் தங்கள் வீட்டு மாடிகளிலிருந்தே தெரிவதாக அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் கூறுகின்றனர். 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அற்புத காட்சி தெரிவதால் மக்கள் மிகுந்த சந்தோசமடைந்து மலைத்தொடரின் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

ஜலந்தர் பகுதியில் சர்வ சாதாரணமாகத் தெரியும் இந்த அழகான காட்சி, கடந்த 25 ஆண்டுகளாகத் தெரியாமல் மக்கள் ஏமாற்றமடைந்திருந்தனர். அதிகப்படியான காற்று மாசே இதற்குக் காரணமாக கூறப்படுகிறது. தற்போது ஊரடங்கால் காற்றின் மாசுபாடு குறைந்துள்ளதால் மீண்டும் இமயமலையின் அழகை ரசிக்கத்தொடங்கியுள்ளனர் அப்பகுதி மக்கள். இந்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளன.

கொரோனாவால் மனிதக் குலம் பெரும் துயரை அனுபவித்தாலும் இதனால் சிறிய நன்மைகளும் ஏற்பட்டு வருவது மறுக்க இயலாத உண்மையாகும்.