"நரகத்தின் கிணறை பாதுகாக்கும் ஆவிகள்".. தில்லாக உள்ளே இறங்கிய வீரர்கள் கண்ட காட்சி.. பல வருஷம் கழிச்சு வெளிச்சத்துக்கு வந்த உண்மை..!
முகப்பு > செய்திகள் > உலகம்ஏமன் நாட்டின் பாலைவனத்தில் உள்ள நரகத்தின் கிணறை காலங்காலமாக ஆவிகள் பாதுகாத்து வருவதாக நம்புகிறார்கள் உள்ளூர் மக்கள்.

பொதுவாக அமானுஷ்ய விஷயங்களுக்கு மக்களிடையே அதிக அளவில் வரவேற்பு இருக்கிறது. இதனாலேயே ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான அமானுஷ்ய இடங்கள் பிரபலமாக இருக்கிறது. அந்த வகையில் மத்திய கிழக்கு நாடான ஏமனில் இருக்கும் நரகத்தின் கிணறு மிகவும் பிரசித்தி பெற்றது. வெற்றுப் பாலைவனத்தில் இருக்கும் இந்த பிரம்மாண்ட துளைக்குள் ஆவிகள் இருப்பதாகவும் அவை இந்த கிணறை பாதுகாப்பதாகவும் நம்புகிறார்கள் உள்ளூர் மக்கள்.
நரகத்தின் கிணறு
ஏமனின் பாலைவனத்தில் உள்ள அல்-மஹ்ரா மாகாணத்தில் அமைந்துள்ளது பர்ஹவுட் கிணறு. இதன் ஆழம் 112 மீட்டராகும். உள்ளூர் நாட்டுப்புற கதைகளில் இந்த கிணறுக்குள் ஆவிகள் இருப்பதாகவும், இவை ஒரு உருவத்தில் இருந்து மற்றொன்றாக மாறும் தன்மை கொண்டவை என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த கிணறுக்கு அருகில் செல்பவர்களை இந்த ஆவிகள் உள்ளே இழுத்துக்கொள்ளும் எனவும் மக்கள் நம்புகிறார்கள். இதனாலேயே இதற்கு பக்கத்தில் செல்லவே மக்கள் அச்சமடைகின்றனர்.
அதாவது, கிணறுக்கு 30 மீட்டர் தொலைவில் செல்பவர்களைக்கூட இந்த ஆவிகள் உள்ளே இழுத்து வேட்டையாடும் என்கிறார்கள் உள்ளூர் மக்கள். மேலும், இந்த கிணறு பாதாள உலகத்தின் வாயிலாக இருப்பதாகவும், அதனுள் எப்போதும் வேட்டையாடும் ஆவிகள் உடலை அப்படியே வீசிவிடுவதால் துர்நாற்றம் அதிகமாக இருக்கும் எனவும் கூறுகின்றனர். இன்று நேற்றல்ல. காலங்காலமாகவே இந்த கதைகள் புழக்கத்தில் இருக்கின்றன.
வெளியே வந்த உண்மை
இந்நிலையில், அண்டை நாடான ஓமானில் இருந்து வீரர்கள் இந்த குகைக்கு வந்திருக்கிறார்கள். பயிற்சி பெற்ற OCET (Omani Caves Exploration Team) வீரர்கள் இந்த குகைக்குள் இறங்கி ஆய்வு மேற்கொள்ள முடிவெடுத்திருக்கிறார்கள். இதனையடுத்து கயிறுகள் மூலமாக, குகைக்குள் இறங்கிய வீரர்கள் உள்ளே இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். குகையின் அடிப்பாகத்தில் பாம்புகள் மற்றும் ஊர்வன விலங்குகள் அதிகம் இருப்பதாகவும் உள்ளே நீர்வீழ்ச்சிகள் இருப்பதையும் வீரர்கள் கண்டறிந்துள்ளனர்.
மேலும், சந்தேகத்திற்கு இடமாக உள்ளே ஏதுமில்லை எனவும் வீரர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். சில விலங்குகளின் எலும்புக்கூடுகள் இருப்பதாகவும் அவை இந்த கிணறுக்குள் தவறிவிழுந்து இறந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெகுகாலமாக சொல்லப்பட்டதுபோல, உள்ளே நெருப்பு பிழம்புகள் ஏதுமில்லை என வீரர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதன்மூலம், பல்லாண்டுகளாக பரப்பப்பட்ட கதைகளை பொய் என இந்த வீரர்கள் நிரூபித்திருக்கின்றனர்.

மற்ற செய்திகள்
