ஒரே எரிமலை 16,000 ஹிரோஷிமா குண்டுகளுக்கு சமமா..?? உலகையே அச்சுறுத்தும் தம்போரா எரிமலையின் திகில் பின்னணி..!
முகப்பு > செய்திகள் > உலகம்தம்போரா எரிமலை வெடிப்பு உலக வரலாற்றில் பெரும் சோகமாக கருதப்படுகிறது. கிட்டத்தட்ட உலக நாடுகள் பலவற்றில் இதன் தாக்கம் இருந்ததாக கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

அது ஏப்ரல் 10, 1815 ஆம் வருடம். இந்தோனேஷியா அருகே உள்ள சும்பாவா தீவில் அமைந்திருக்கும் தம்போரா கிராமம் வழக்கம்போல இயங்கிக்கொண்டிருந்தது. விவசாயம் மட்டுமே அங்கே முக்கிய பணியாக இருந்த காலகட்டம். திடீரென பலத்த சத்தம் எழுந்திருக்கிறது. அது தம்போரா எரிமலை வெடிப்புத்தான். எரிமலை தீக்குழம்புகளை வானத்தை நோக்கி பாய்ச்ச கிராமத்தினர் ஒருநிமிடம் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போயிருக்கின்றனர். தப்பிக்க அவகாசம் இல்லாமல் அந்த சம்பவத்தில் சுமார் 11,000 பேர் மாண்டதாக சொல்லப்படுகிறது.
எரிமலையில் இருந்து கிளம்பிய புகைமூட்டம் சுமார் 40 கிலோமீட்டர் வரையில் வளிமண்டலத்தில் பரவியதாகவும் கூறப்படுகிறது. வானத்தையே இது மறைக்க, மற்றொருபுறம் எரிமலை குழம்புகள் அருகில் இருந்த விவசாய நிலங்களில் ஆறாக பெருக்கெடுத்து ஓடியதாகவும் இந்தோனேஷிய நாட்டுப்புறக் கதைகள் கூறுகின்றன.
தம்போரா எரிமலை வெடிப்புச் சத்தம் சுமார் 1600 மைல்களுக்கு கேட்டதாக தெரிகிறது. எரிமலை குழம்புகள் அருகில் இருந்த நிலங்களில் சுமார் 20 செமீ வரையில் படிந்து போயின. இந்த எரிமலை வெடிப்பு ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டை காட்டிலும் 16,000 மடங்கு சக்தி வாய்ந்ததாக இருந்திருக்கலாம் என சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
தம்போராவில் ஏற்பட்ட வெடிப்பு அத்தோடு நின்றுவிடவில்லை. எரிமலையில் இருந்து கிளம்பிய தூசுக்கள் வளிமண்டலத்தில் பரவி சூரிய ஒளியையே மறைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அந்த ஆண்டு முழுவதும் சூரிய ஒளியே அப்பகுதியில் விழவில்லை எனவும் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக விவசாயம் பல நாடுகளில் பொய்த்துப்போனது. இந்தியா, இங்கிலாந்து, பிரான்ஸ் என பல்வேறு நாடுகளில் இந்த எரிமலை வெடிப்பின் தாக்கம் இருந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
தம்போரா வெடித்தபோது, சுமார் இரண்டு மில்லியன் டன்கள் கந்தக டை ஆக்சைடையும் 160 கன கிலோமீட்டர் தீக்குழம்பையும் வெளியேற்றியதாக கணிக்கப்பட்டுள்ளது. சூரிய ஒளியே இல்லாமல் போனதால் விளைச்சல் பாதிக்கப்பட்டு இந்தியா உட்பட பல நாடுகள் பஞ்சத்தை சந்தித்திருக்கின்றன. 1815 க்கு பிறகு 3 முறை தம்போரா வெடித்திருக்கிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு இந்தோனேஷியா பகுதிகளில் பூகம்பங்கள் ஏற்பட்டபோது சுமார் 4000 மீட்டருக்கு புகையை வெளியேற்றியது இந்த எரிமலை.
ஆராய்ச்சியாளர்களை பொறுத்தவரையில், தம்போரா இன்னும் செயல்பாட்டில் இருக்கும் எரிமலை என்றே வகைப்படுத்தப்படுகிறது. உலக வரலாற்றில் பெரும் சோகமாக கருதப்படும் 1815 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெடிப்பை நினைவுகூரும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் சும்பாவா தீவை சேர்ந்த மக்கள் ஏப்ரல் 12-18 தேதிகளில் `உலகத்தை வரவேற்கும் தம்போரா (Tambora Greets the World) எனும் பெயரில் திருவிழாவை நடத்துகின்றனர். இன்று தம்போரா இந்தோனேஷியாவின் மிக முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக இருந்துவருகிறது.
Also Read | "அம்மாவுக்கு ஆபரேஷன் பண்ணனும்".. மர்ம ஆசாமியின் பலே உருட்டு.. இரக்கப்பட்டவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

மற்ற செய்திகள்
