‘எங்க உயிருக்கே இங்க பாதுகாப்பு இல்ல’... ‘நாங்க ஏன் வேலை செய்யணும்’... ‘கடும் தட்டுப்பாடால் கலக்கம்’!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sangeetha | Apr 21, 2020 04:35 PM

இங்கிலாந்தில் சிகிச்சையின்போது மருத்துவர்கள் அணியும் பாதுகாப்பு கவச உடைகளுக்கு தற்போது கடும் தட்டுப்பாடு நிலவுவதால், மருத்துவர்கள் மிகவும் கலக்கத்தில் உள்ளனர்.

Coronavirus Doctors PPE shortage fears UK grow pandemic stockpile

இங்கிலாந்தில் கொரோனாவின் தாக்கம் உச்சத்தை எட்டியுள்ளதால், அங்கு கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மருத்துவர்கள், நர்சுகள் உள்ளிட்ட சுகாதாரத்துறை பணியாளர்கள் தினமும் 12 மணி நேரத்துக்கும் அதிகமாக பணியாற்றி வருகின்றனர்.

இதுவரை கொரோனாவுக்கு மருந்து கண்டுப்பிடிக்காத நிலையில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது மருத்துவர்களும் கொரோனா வைரசால் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழக்கும் பரிதாப நிலையும் ஏற்படுகிறது. கடந்த 20 நாட்களில் மட்டும் கொரோனாவுக்கு மருத்துவர்கள், நர்சுகள், மருத்துவ ஊழியர்கள் என 95 பேர் அங்கு பலியாகி உள்ளனர். இது இங்கிலாந்து மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இந்த நிலையில், சிகிச்சையின்போது மருத்துவர்கள் அணியும் பாதுகாப்பு கவச உடைகளுக்கு தற்போது கடும் தட்டுப்பாடு அங்கு நிலவுகிறது. கையிருப்பில் உள்ள கவச உடைகள் இன்னும் ஓரிரு நாட்களுக்கே கைகொடுக்கும் என்னும் நிலை காணப்படுகிறது. இதையடுத்து, துருக்கி நாட்டில் இருந்து 4 லட்சம் கவச உடைகளை பெற அவசர ஆர்டர் கொடுக்கப்பட்டதில் 40 ஆயிரம் உடைகளே வந்து சேர்ந்துள்ளது.

கவச உடைகளுக்கு தட்டுப்பாடு இருப்பதால் பழைய உடைகளை சுத்தம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லது ஆய்வகங்களில் அணியும் வெள்ளை கோட்டுகளை தற்காலிகமாக மருத்துவர்கள் உபயோகிக்கலாம் என்று இங்கிலாந்தின் பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தி இருக்கிறது.

இதற்கு, ‘பிரிட்டி‌‌ஷ் மருத்துவ சங்கம்’ பலத்த எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. ‘‘மருத்துவர்களின் உயிருக்கு பாதுகாப்பு இருந்தால்தான் அவர்களால் கொரோனா நோயாளிகளை காப்பாற்ற இயலும். இதனால் மருத்துவர்களின் உயிருக்கும் மதிப்பளியுங்கள். புதிய கவச உடைகள் கிடைக்காமல் போனால் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை மருத்தவர்கள் நிறுத்த நேரிடும்’’ என்று அச்சங்கம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.