‘சொன்னா கேட்கமாட்ட’... ‘ஆத்திரத்தில் காதல் மனைவியை'... 'கணவன் செய்த அதிர்ச்சி காரியம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Aug 02, 2019 10:42 AM

குடும்பத்தகராறு காரணமாக மனைவியின் கழுத்தை அறுத்து கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

wife killed by her husband due to family issues in tirupur

திருப்பூர் அருள்ஜோதிநகர் பகுதியைச் சேர்ந்தவர் 35 வயதான ரமேஷ்குமார். அதேப் பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில், தையல் தொழிலாளியாக வேலைப் பார்த்து வந்த இவர், செல்வலட்சுமிநகர் பகுதியைச் சேர்ந்த பிரியா என்பவரை 12 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். ரமேஷ்குமார் தையல் தொழில் செய்து வந்தாலும், பனியன் தொடர்பான வியாபாரம் செய்து வந்துள்ளார். அதில் நஷ்டம் ஏற்படவே, மன அழுத்தத்தில் இருந்து வந்த ரமேஷ்குமார், அவ்வப்போது மது அருந்திவிட்டு வந்து, மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

பலமுறை கூறியும் மதுப்பழக்கத்தை நிறுத்தாததால், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு, பிரியா குழந்தைகளுடன் செல்வலட்சுமிநகர் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் ரமேஷ்குமார் கடந்த வியாழக்கிழமை மாலை திடீரென பிரியாவின் பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவரை சந்தித்து, நாம் இருவரும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை தீர்த்து கொள்ளலாம் என்று கூறி, அவரை தனது தாயின் வீட்டிற்கு வருமாறு ரமேஷ்குமார் அழைத்துள்ளார். அதை நம்பிய பிரியா தனது கணவருடன் சென்றுள்ளார். அங்கு ரமேஷ்குமார், ரமேஷ்குமாரின் தாய் மற்றும் பிரியா ஆகியோர் அமர்ந்து பிரச்சினை குறித்து பேசியுள்ளனர். சிறிது நேரத்தில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த ரமேஷ்குமார் அருகில் இருந்த கத்தியை எடுத்து பிரியாவை சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் வலிதாங்க முடியாமல் பிரியா அலறி துடித்தபடி சரிந்து கீழே விழுந்துள்ளார். அப்போது அவரின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துள்ளார். பிரியாவின் சத்தம் கேட்டு அங்கு ஏராளமானோர் திரண்டு வந்தனர். அவர்கள் கத்திக்குத்து காயங்களுடன் கிடந்த பிரியாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் அதற்குள் அவர் இறந்து விட்டார்.

பின்னர் கொலை செய்துவிட்டு தப்பியோட முயற்சித்த ரமேஷ்குமாரை பொதுமக்கள் சுற்றி வளைத்துப் பிடித்தனர். பின்னர் இதுகுறித்து தகவலின்படி அங்கு விரைந்து சென்ற போலீசார் பிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் பேரில் ரமேஷ்குமார் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து கொலை தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #MURDER #TIRUPUR