கனமழை எதிரொலி.. 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.. இந்தப் பகுதி மக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம்.. எச்சரித்த வெதர்மேன்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாளை கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்ட பள்ளிகளுக்கு நாளை (நவம்பர் 1) விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.

இந்திய அளவில் தென்மேற்கு பருவ மழையின்போது பெரும்பாலான மாநிலங்கள் மழையை பெறும் என்றாலும் தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின்போது மட்டுமே கணிசமான மழைப் பொழிவு இருக்கும். இந்நிலையில், இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையானது கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி துவங்கியது. இந்நிலையில் நாளை முதல் மழையின் தீவிரம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனையடுத்து வட தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. இதனை கருத்தில்கொண்டு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறையை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்திருக்கின்றனர்.
இந்நிலையில், பெரும் மேகங்கள் சென்னை மாநகருக்குள் நகர்வதால் பெருமழை பெய்யலாம் எனவும், மக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரித்திருக்கிறார். இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில்,"சென்னையின் நகருக்குள் பெரும் மேகங்கள் நகரும்பட்சத்தில் மிக கனமழையினை எதிர்பார்க்கலாம். மழையின் தீவிரம் மிக அதிகமாக இருக்கும் என்பதால், தயவுசெய்து வீட்டிற்குள்ளேயே இருங்கள் மற்றும் சாலைகளில் பயணம் செய்வதைத் தவிர்க்கவும். வடசென்னை மற்றும் வடமேற்கு சென்னை பல இடங்களில் ஏற்கனவே நூற்றாண்டு காணாத மழை பெய்துள்ளது. கடலில் இன்னும் மழை மேகங்கள் உருவாகி அவை நகருக்குள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக இன்று இரவு மற்றும் நாளையும் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
