"என்ன மன்னிச்சுடுங்க.." திருடிய பணத்தை மீண்டும் கோவில் உண்டியலில் போட்ட திருடன்.. 'பின்னணி' என்ன??
முகப்பு > செய்திகள் > தமிழகம்ராணிப்பேட்டை மாவட்டம், லாலாபேட்டை அருகே காஞ்சனகிரிமலையில் அமைந்துள்ளது ஈஸ்வரன் கோவில்.

Also Read | "1 KG டீ தூள் விலை இவ்ளோ ரூபாவா..?" .. அப்படி என்னங்க இதுல ஸ்பெஷல்??
மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில், கடந்த சித்திரை மாதத்தின் போது, சித்ரா பௌர்ணமி விழா சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.
இதனிடையே, சித்ரா பௌர்ணமி நிகழ்ச்சி நடந்து முடிந்த சில தினங்களுக்குள், ஈஸ்வரன் கோவிலில் உள்ள 1008 சுயம்பு லிங்கத்திற்கு முன் வைக்கப்பட்டு இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணமும் திருடு போய் இருந்தது.
கோவிலில் நடந்த திருட்டு
இந்த சம்பவம், கோவில் நிர்வாகத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. தொடர்ந்து, கோவில் நிர்வாகத்தினர் சார்பில் போலீஸ் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டிருந்தது. கோவிலில் நடந்த திருட்டு தொடர்பாக போலீசாரும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
உண்டியலில் கிடந்த கடிதம்
இந்நிலையில், கோவில் நிர்வாகத்தினர் 1008 சுயம்பு லிங்கங்கள் முன்பு இருந்த உண்டியலை திறந்து பணத்தை எடுத்த போது, அதில் கடிதம் ஒன்று இருந்துள்ளது. வழக்கம் போல, பக்தர்கள் செலுத்திய காணிக்கையை எண்ணுவதற்காக, உண்டியலை திறந்துள்ளனர். அப்போது, பக்தர்கள் செலுத்திய பணத்துடன், ஒரு கடிதமும் அதனுள்ளே சுமார் 10,000 ரூபாயும் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த கடிதத்தில், "என்னை மன்னித்து விடுங்கள். நான் சித்ரா பௌர்ணமி கழித்து தெரிந்தே கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி விட்டேன். அப்போது இருந்து எனக்கு மனசு சரியில்லை. நிம்மதியில்லை. அப்புறம் வீட்டில் நிறைய பிரச்சினை வருகிறது. எனவே நான் மனம் திருந்தி எடுத்த பணத்தை அதே உண்டியலில் போட்டு விடுகிறேன். எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள். கடவுளும் என்னை மன்னிப்பாரா என்று தெரியாது. வணக்கம்" என எழுதப்பட்டிருந்தது.
இந்த கடிதம் கோவில் நிர்வாகத்தினர் மத்தியில், கடும் ஆச்சரியத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. தொடர்ந்து, உண்டியலில் இருந்து கிடைத்த கடிதத்தினை போலீசாரிடமும் அவர்கள் ஒப்படைத்தனர்.
கோவில் உண்டியலில் இருந்து பணத்தை திருடிய நபர், தனக்கு நேர்ந்த மன உளைச்சல் மற்றும் பிரச்சனைகள் காரணமாக, மனம் திருந்தி, எடுத்த உண்டியலிலேயே மீண்டும் பணத்துடன் சேர்ந்து மன்னிப்பு கடிதத்தையும் போட்டுச் சென்ற சம்பவம், பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
