‘ஐயா நான் எதிர்க்கட்சியை சார்ந்தவன்’!.. ‘இந்த கொரோனாவ கட்டுப்படுத்த..!’.. முதல்வர் ட்விட்டுக்கு வந்த பதில் ‘ட்வீட்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Apr 10, 2020 10:16 AM

எங்களை போன்ற சமூக தன்னார்வலர்களையும் சேர்த்து கொள்ளுங்கள் ஐயா என ட்விட்டரில் இளைஞர் பதிவிட்ட பதிவுக்கு முதல்வர் பதிலளித்துள்ளார்.

CM Edappadi Palaniswami appreciate volunteers for corona work

கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அறிவித்தது. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன.

தமிழகத்திலும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா விழிப்புணர்வு தொடர்பாக ‘நமக்காக உழைப்போருக்கு நாமும் ஒத்துழைப்போம்’ என்ற விளம்பரத்தை முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த விளம்பரத்தில் தூய்மை பணியாளர்கள், காவல்துறையினர், மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோரின் படங்கள் இடம்பெற்றிருந்தன.

இந்த விளம்பரத்துக்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் கிறிஸ்டோபர் என்ற தன்னார்வலர், ‘ஐயா இந்த லிஸ்டில் எங்களை போன்ற சமூக தன்னார்வலர்களையும் சேர்த்து கொள்ளுங்கள். அவ்வாறு செய்தால் அது எங்கள் பணியை மேலும் சிறப்பாக செய்ய ஊக்கம் தரும்’ என பதிவிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த முதல்வர், ‘கண்டிப்பாக தம்பி, தங்களைப் போன்ற தன்னார்வலர்களின் பணியும் பங்களிப்பும் அளப்பரியது. கொரோனாவிற்கு எதிரான இந்த போராட்டத்தில் மக்களைக் காக்க ஓயாது பணியாற்றி வரும் தங்களுக்கும், தன்னார்வலர்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுதல்களும்!’ என பதிலளித்துள்ளார்.

முதல்வரின் இந்த பதிவுக்கு பாபு அருணாச்சலம் என்பவர், ‘ஐயா நான் எதிர்க்கட்சியை சார்ந்தவன். இந்த கொரனாவை கட்டுப்படுத்த இரவுபகல் பாரமல் உங்களின் இந்த அளப்பரிய பணியை பார்த்து தலை வணங்குகிறேன். கொரனா அழிக்கும் தங்களின் முயற்ச்சிக்கு பின்னால் நாங்களும் இருக்கின்றோம்' என முதல்வரை பாராட்டி நன்றி தெரிவித்துள்ளார்.