புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் ராஜ்குமார். 30 வயதான இவருக்கும் தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தாலுகா மருங்குப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் மூத்த மகளுக்கும் திருமணம் செய்ய உறவினர்களால் நிச்சயம் செய்யப்பட்டது. இதையடுத்து திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்றது.
மனதில் ஆயிரம் கனவுகளோடு மணமகன் திருமண நாளன்று திருமணம் நடக்கவிருந்த கோவிலுக்கு வந்துள்ளார். ஆலங்குடியில் உள்ள ஒரு கோவிலில் திருமண ஏற்பாடுகள் நடந்த நிலையில், கோவிலுக்கு வெளியே மணமக்களை வாழ்த்தி பேனர்களும் வைக்கப்பட்டிருந்தது. தாலி கட்டும் நேரம் நெருங்கிய நிலையில், மணமகளின் உறவினர் ஒருவர் ஓடி வந்து, மணமகளைக் காணவில்லை என்ற குண்டை தூக்கிப் போட்டுள்ளார்.

இதனால் இரு வீட்டாருமே ஒரு நிமிடம் ஆடிப் போனார்கள். திருமணத்திற்கு உறவினர்கள் பலரும் கூடியிருந்த நிலையில் அடுத்தது என்ன செய்யப் போகிறோம் என ஒருவருக்கும் ஒன்றும் புரியாமல் இருந்துள்ளார்கள். அப்போது மாப்பிள்ளையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மணப்பெண்ணின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
ஒரு கட்டத்தில் மணப்பெண் தனது வாழ்க்கையை அவளே தேடிக் கொண்டாள், அவளுக்குக் கொடுத்து வைத்தது அவ்வளவு தான் என வருத்தம் தெரிவித்தார்கள். ஆனால் ஆயிரம் கனவுகளோடு வந்த மாப்பிள்ளை குறித்துத் தான் பலரும் வருந்தினார்கள். இதையடுத்து மணப்பெண்ணின் உறவினர்கள் ஒரு முடிவுக்கு வந்தார்கள். அதன்படி மாயமான மணப்பெண்ணின் தங்கையை நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளைக்குத் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது.

19 வயதான அந்த பெண்ணை தங்களின் மருமகளாக ஏற்றுக் கொள்ள மாப்பிள்ளையின் பெற்றோர் சம்மதம் தெரிவித்தார்கள். இதையடுத்து கோவிலில் வைக்கப்பட்டிருந்த திருமண பேனர்களை அவிழ்த்து எடுத்தனர். இதனால் கடைசி நிமிடத்தில் திருமணத்திற்கு வந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ஒரு வழியாக அங்கு நடந்த நிகழ்வைத் திருமணத்திற்கு வந்தவர்கள் புரிந்து கொண்ட நிலையில், இறுதியாகத் திருமணம் நடந்து முடிந்தது.
நிச்சயிக்கப்பட்ட பெண் மாயமானதை அடுத்து, மயமான பெண்ணின் தங்கையோடு மாப்பிள்ளைக்குத் திருமணம் நடந்த நிகழ்வு அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.