'அவளுக்கு புடிச்ச படிப்பு'...'ஆசையா காலேஜ்க்கு போன புள்ள'... ஹாஸ்டலில் அலறி துடித்த தோழிகள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Jeno | Aug 23, 2019 04:53 PM
ஆசையாய் கல்லூரிக்கு சென்ற மாணவி விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் அனந்தபுரி பகுதியை சேர்ந்தவர் லிங்கராஜு. இவரது மகள் காவியா. இவர் ஆந்திராவில் உள்ள நர்சிங் கல்லூரியில் பி.எஸ்.சி நர்சிங் படித்து வந்துள்ளார். நர்சிங் படிப்பு தான் வேண்டும் என்று காவியா விரும்பி எடுத்துள்ளார். மகிழ்ச்சியாக கல்லூரிக்கு சென்று வந்த காவியாவிற்கு திடீரென ஒரு தடங்கல் வந்துள்ளது. தனது 12ம் வகுப்பு வரை தெலுங்கு வழியிலேயே கல்வி கற்ற அவருக்கு, கல்லூரியில் அனைத்தும் ஆங்கிலத்தில் இருந்தது அவருக்கு சிரமத்தை அளித்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே கல்லூரியில் மாணவர்கள் பலரும் சகஜமாக ஆங்கிலத்தில் பேசும் போது நம்மால் பேச முடியவிலையே என்று காவியா மனதில் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது அவருக்கு மேலும் மன உளைச்சலை அளித்துள்ளது. இந்நிலையில் கல்லூரி விடுதியில் தங்கி இருக்கும் காவியா, தனக்கு கடுமையான வயிற்று வலி இருப்பதாக கூறி, கல்லூரிக்கு செல்லாமல் விடுதி அறையில் இருந்துள்ளார். அப்போது மனஉளைச்சல் அதிகமாக தன்னுடைய துப்பட்டாவை மின் விசிறியில் போட்டு தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து கல்லூரி முடிந்து விடுதி அறைக்கு வந்த அவரது தோழிகள் காவியா தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அலறி துடித்தார்கள். இதையடுத்து கல்லூரி நிர்வாகம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் காவியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்கள்.
இதனிடையே மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர்கள் புகார் அளித்துள்ள நிலையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் ஆந்திரா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
