‘கொரோனா’ பாதித்தவர்களில் ‘80 சதவீதம்’ பேருக்கு... வெளியாகியுள்ள ‘ஆறுதலான’ செய்தி... ஆனாலும் ‘இது’ அவசியம்...
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களில் 80 சதவீதம் பேர் தானாகவே குணமாகிறார்கள் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்துப் பேசியுள்ள மருத்துவ கவுன்சில் இயக்குநர் பலராம் பார்கவா, “இது அனைவரும் அவசியமாக தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு விஷயமாகும். கொரோனாவால் பாதிக்கப்படும் மக்களில் 80 சதவீதம் பேர் சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, தானாகவே குணமாகின்றனர். இருப்பினும் கொரோனா அறிகுறி உள்ளவர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என அனைவரும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.
இந்த 80 சதவீதம் பேரைத் தவிர மற்ற 20 சதவீதம் பேர் சளி, இருமல், காய்ச்சல் மற்றும் சில அறிகுறிகளால் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டிய நிலைக்கு செல்கின்றனர். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவர்களில் நோயின் தீவிரத்தைப் பொறுத்து 5 சதவீதம் பேருக்கு போதுமான சிகிச்சை அளிக்க வேண்டிய நிலையும், சிலருக்கு புதிய மருந்துகள் கொடுக்கப்பட வேண்டிய நிலையும் ஏற்படுகிறது.
நாங்கள் இதுவரை 15,000 - 17,000 பேருக்கு சோதனைகளை நடத்தி இருக்கிறோம். நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் பேருக்கு பரிசோதனைகளை நடத்தும் திறனும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடம் உள்ளது. மேலும் இந்த கோரோனா வைரஸ் காற்றில் பரவுவதில்லை. தண்ணீர்த் துளிகள் மூலமாக பரவுகிறது. பாதிக்கப்பட்டவருடன் நேரடித் தொடர்பு மற்றும் தொடுதல் ஆகியவற்றால் இந்த வைரஸ் பரவுவதால் அதைத் தடுக்க மக்கள் அனைவரும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வது மிகவும் அவசியமாகும்” எனத் தெரிவித்துள்ளார்.
எனவே இதை ஒரு ஆறுதலான விஷயமாகவே கருத வேண்டுமே தவிர, இதன் காரணமாக அலட்சியப் போக்கோடு இருத்தல் கூடாது. மேற்கூறியதுபோல 80 சதவீதம் பேருக்கு குணமாக வாய்ப்புள்ளது என்றபோதிலும் அவர்களுக்கும் பரிசோதனை, மருத்துவர்களின் கண்காணிப்பு, தனிமைப்படுத்திக் கொள்ளுதல் ஆகியவை அவசியமாகும். மேலும் அவர்களால் மற்றவர்களுக்கு நோய் பரவும் ஆபத்தும் உள்ளதால் அனைவரும் தனிமைப்படுத்திக் கொள்ளுதல் கட்டாயமான ஒன்றாகும்.
