'உலகக்கோப்பை தானே,பாத்துக்கலாம்னு இருக்காதீங்க'...பின்னாடி வருத்தப்படுவீங்க...எச்சரித்த பிரபல வீரர்!
முகப்பு > செய்திகள் > தமிழ்By Jeno | Mar 22, 2019 09:17 AM
வரவிருக்கும் உலகக்கோப்பை போட்டிகளை இந்திய அணி எளிதாக எடுத்துக்கொள்ள கூடாது,அப்படி எடுத்துக் கொண்டால் உலகக்கோப்பை நமக்கு எட்டாமல் போய்விடும் என முன்னாள் இந்திய வீரர் ராகுல் ட்ராவிட் கூறியுள்ளார்.

இதுக்குறித்து அவர் மேலும் கூறுகையில் ''இந்திய அணிக்கு உலககோப்பையினை வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.ஆனால் அதற்காக கடுமையாக இந்திய வீரர்கள் போராட வேண்டியிருக்கும். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்தாலும்,அதுவும் ஒரு விதத்தில் நல்லது தான்.அந்த போட்டியிலிருந்து நிச்சயம் இந்திய வீரர்கள் நிறைய பாடங்களை கற்றிருப்பார்கள்.இந்த தோல்வியினால் துவண்டு போக அவசியமில்லை.
இந்தியா உலகக் கோப்பையில் எதிரணிகள் வீழ்த்த சிரமப்படும் அணியாக இருக்கும்.அந்த அளவிற்கு இந்திய வீரர்களின் ஆட்டம் சிறப்பாக உள்ளது. கடந்த சில வருடங்களாகவே இந்திய அணி ஒரு நாள் போட்டிகளில் அதிக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தில் இருப்பது மூலம் உலககோப்பையினை வெல்லும் அணிகள் பட்டியலில் இந்திய அணியும் உள்ளது.ஆஸ்திரேலியவிற்கு எதிரான தோல்வியினை மறந்து இந்திய வீரர்கள் ஆட வேண்டும்.
இதனை இந்திய வீர்கள் திறம்பட செய்யும் பட்சத்தில் நிச்சயம் உலகக்கோப்பை இந்திய அணிக்கு தான்'' என ராகுல் ட்ராவிட் தெரிவித்துள்ளார்.இந்தியா உலகக் கோப்பையில் தனது துவக்க ஆட்டத்தில் ஜூன் 5ம் தேதி தென்னாபிரிக்காவை சந்திக்கிறது. அதற்கு முன் நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுடன் பயிற்சி ஆட்டத்தில் மோதுகிறது.
