அமெரிக்காவில் 'இது' மட்டும் நடந்தால்... 'எச்சரித்த' அதிகாரியை 'கடுமையாக' சாடிய 'ட்ரம்ப்'... வெளியான 'புது' விளக்கம்...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Apr 23, 2020 04:52 PM

அமெரிக்காவில் இரண்டாவது அலை வீசினால் அது மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறிய அதிகாரியை அதிபர் ட்ரம்ப் கடுமையாக சாடியுள்ளார்.

US Trump Has CDC Director Clarify About Second Coronavirus Wave

உலகிலேயே கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடாக உள்ள அமெரிக்காவில் 8 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47,000ஐக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து மீள முடியாமல் அமெரிக்கா திணறி வரும் நிலையில், அங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கைத் தளர்த்தக் கோரி அந்நாட்டின் பல மாகாணங்களிலும் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே அதிபர் ட்ரம்பும் ஊரடங்கைத் தளர்த்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருவது குறிப்பிட்டத்தக்கது. இதையடுத்து ஊரடங்கைத் தளர்த்துவதற்கு பல மாகாண ஆளுநர்களும், மருத்துவ நிபுணர்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கொரோனா பரவத் தொடங்கியபோது தாமதமாகச் செயல்பட்டதால்தான் தற்போது அமெரிக்கா மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக பல தரப்பிலிருந்தும் குற்றம்சாட்டு எழுந்துவரும் வேளையில், தற்போது மீண்டும் ஊரடங்கைத் தளர்த்தினால் அது இரண்டாவது அலை வீச வாய்ப்பை ஏற்படுத்தும் என பலரும் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனாவின் இரண்டாவது அலை வீசினால் அமெரிக்கா இன்னும் மோசமான பாதிப்புகளை சந்திக்கும் என அந்நாட்டின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் தலைவர் ராபர்ட் ரெட்ஃபீல்ட் தெரிவித்துள்ளார். இதுகுறித்துப் பேசியுள்ள அவர், "அமெரிக்காவில் குளிர்காலத்தில்  மீண்டும் வைரஸ் பரவல் ஏற்பட்டால் அது தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்பை விட மிகக் கடுமையாக இருக்க வாய்ப்புள்ளது. ஒரே நேரத்தில் காய்ச்சல் மற்றும் தொற்று நோய் பரவும் அபாயம் அதிகரிக்கக் கூடும்" என எச்சரித்துள்ளார்.

இதையடுத்து நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ட்ரம்ப், ராபர்ட் ரெட்ஃபீல்டின் கருத்தை முற்றிலுமாக மறுத்துள்ளார். ராபர்ட் சொல்வதுபோல ஒருபோதும் நடக்காது என கடுமையாக சாடியுள்ள ட்ரம்ப், அதுகுறித்து அவர் தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து இரண்டாம் அலை குறித்து விளக்கமளித்துள்ள ராபர்ட், "காய்ச்சலும், கொரோனா பாதிப்பும் சேர்ந்து வந்தால் சிக்கலான நிலை உருவாகும் என்றே கூறினேன். 2வது அலை மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என நான் கூறவில்லை" எனக் கூறியுள்ளார்.