'என்னோட மக்கள நான் பாத்துக்குவேன்!'.. சொந்த நாட்டு மருத்துவமனையில்... சுகாதாரப் பணியாளராக வேலைக்குச் சேர்ந்த இளவரசி!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manishankar | Apr 18, 2020 04:04 PM

சுவீடனில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் மருத்துவமனையில் அந்த நாட்டின் இளவரசி பணியை தொடங்கியுள்ளார்.

sweden princess sofia turns as healthcare worker to aid patients

ஐரோப்பிய நாடான சுவீடனில் இதுவரை 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 1,200-க்கும் அதிகமானோரின் உயிரை இந்த வைரஸ் பறித்துள்ளது.

இந்த நிலையில், அந்த நாட்டின் இளவரசி சோபியா, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கப்படும் மருத்துவமனையில் பணியாற்ற தொடங்கியுள்ளார்.

35 வயதான இவர், ஆன்லைன் மூலம் 3 நாள் சிறப்பு பயிற்சியினை முடித்த பின்பு தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள சோபியாஹெமெட் மருத்துவமனையில் தனது சேவை பணியை தொடங்கி இருக்கிறார்.

மருத்துவமனையில் சுகாதார உதவியாளராக சேர்ந்துள்ள இளவரசி சோபியா, கொரோனா நோயாளிகளை கையாள்வதில் நேரடியாக ஈடுபட மாட்டார். அதே சமயம் டாக்டர்கள் மற்றும் நர்சுகளுக்கு தேவையான உதவிகளை செய்வார்.

சோபியாஹெமெட் மருத்துவமனையின் ஆன்லைன் பாடத்திட்டமானது, சுகாதாரம் குறித்த சில முக்கிய பயிற்சிகளை வழங்குகிறது. சுத்தம் செய்தல், சமையலறையில் வேலை செய்தல், உபகரணங்கள் கிருமி நீக்கம் செய்தல் என பலவற்றை கொண்டிருக்கிறது.

இந்த பயிற்சியினை முடித்தவர்கள் சுகாதார ஊழியர்களின் பணிச்சுமையை குறைக்க உதவ முடியும். தற்போது வாரத்திற்கு 80 பேர் வீதத்தில் மருத்துவமனை இந்த பயிற்சியினை தன்னார்வலர்களுக்கு வழங்கி வருகிறது.

இளவரசி சோபியா, தனது முதல் நாள் பணியின் புகைப்படத்தினை இணையத்தில் பகிர்ந்திருக்கிறார். நீல நிற மருத்துவ உடையுடன் சமூக இடைவெளியை கடைப்பிடித்து நிற்கும் அந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

முன்னாள் மாடல் அழகியான சோபியா கடந்த 2015-ம் ஆண்டு சுவீடன் இளவரசர் கார்ல் பிலிப்பை திருமணம் செய்துகொண்டதன் மூலம் அவர் அரச குடும்பத்தின் அங்கமானார்.

இளவரசர் பிலிப்-சோபியா தம்பதிக்கு அலெக்சாண்டர் என்ற மகனும், கேப்ரியல் என்ற மகளும் உள்ளனர்.