"மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்புங்கள்..." 'இது போன வாரம்...' "அமெரிக்காவிலிருந்து யாரும் மெக்சிகோவிற்குள் வரக்கூடாது..." 'இது இந்த வாரம்...' 'மாறிய வரலாறு...'
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் அந்நாட்டைச் சேர்ந்தவர்கள் யாரும் மெக்ஸிகோவுக்குள் நுழையக்கூடாது என மெக்ஸிகோ மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. அங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகின்றனர். இதனால் உலகிலேயே அதிக வைரஸ் பாதிக்கப்பட்ட மக்களைக் கொண்ட நாடாக அமெரிக்கா மாறியுள்ளது.
இந்நிலையில், அமெரிக்கா-மெக்ஸிகோ எல்லையில் அந்நாட்டு மக்கள் கடந்த மூன்று நாட்களாகப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்கர்கள் மெக்ஸிகோவுக்கு வருவதாகவும், இதனால் தங்கள் நாட்டில் வைரஸ் பரவல் அதிகரிக்கும் என்றும் அவர்கள் அஞ்சுகிறார்கள். இதனால் அமெரிக்காவுடனான மெக்ஸிகோ எல்லையை மூடிவிட்டு ‘அமெரிக்கர்களே வீட்டிலேயே இருங்கள்’ என்ற பதாகைகளை ஏந்தியபடி நூற்றுக்கணக்கான மக்கள் முகமூடிகள் அணிந்தவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மெக்ஸிகோவில் இதுவரை 700 பேருக்கு வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கர்களின் வருகையால் இந்த எண்ணிக்கை அதிகரித்து விடக்கூடாது என பயப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். மெக்ஸிகன் அதிபருக்கு இங்கு நடக்கும் நிலைமையைப் புரியவைக்கவே போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம் என்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாகப் பிற நாட்டினர் மெக்ஸிகோ வழியாக சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைவதாக ட்ரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். அந்த மக்களை அனுமதிக்கக் கூடாது என மெக்ஸிகோ அரசைக் கடுமையாக எச்சரித்தார். இதைத் தடுக்கும் நோக்கில் அமெரிக்கா - மெக்ஸிகோ எல்லையில் மிக நீண்ட சுவர் கட்டப்படும் என அறிவித்தார். .
தற்போது நிலைமை அப்படியே தலைகீழாக மாறியுள்ளது. மெக்ஸிகோ மக்கள் அமெரிக்காவுக்குள் நுழையக் கூடாது என்பது போய் அமெரிக்கர்கள் மெக்ஸிகோவுக்குள் நுழையக்கூடாது என மக்கள் போராட்டம் நடத்தியுள்ளது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
