இது எப்படி இங்க வந்துச்சு.. 800 கிலோ எடைகொண்ட திமிங்கிலம்.. களத்துல இறங்கிய 80 வீரர்கள்.. கடைசியா மருத்துவர்கள் எடுத்த சோக முடிவு..!
முகப்பு > செய்திகள் > உலகம்பிரான்ஸ் நாட்டில் உள்ள ஆற்றில் ஒரு வாரத்திற்கும் மேலாக சிக்கியிருந்த பெலுகா திமிங்கலம் மீட்கப்பட்டு கடலுக்கு கொண்டுசெல்லும் போது உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெலுகா
பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள நன்னீர் பகுதியில் கடந்த 2 ஆம் தேதி ஒரு பெலுகா திமிங்கிலம் சிக்கிக்கொண்டது. அதன் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்த நிலையில், அதற்கு உணவளிக்க நிபுணர்கள் முயற்சித்து வந்தனர். ஆனால், அம்முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. இதனை தொடர்ந்து உடனடியாக நன்னீர் பகுதியில் சிக்கிக்கொண்ட திமிங்கிலத்தை மீட்க வன விலங்கு பாதுகாப்புத்துறை களத்தில் இறங்கியது. இந்த மீட்பு பணியில் 80 வீரர்கள் கலந்துகொண்டனர்.
சுமார் 6 மணி நேரம் நீடித்த இந்த பணியில் வெற்றிகரமாக திமிங்கிலம் பிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து திமிங்கிலத்துக்கு முதலுதவி நிபுணர்களால் செய்யப்பட்டிருக்கிறது. அதன் உடல்நிலை சீரான பிறகு நார்மாண்டி கடல் பகுதியில் அதனை விட அதிகாரிகள் முடிவெடுத்திருக்கின்றனர். ஆனால், துரதிஷ்டவசமாக திமிங்கிலத்தின் உடல் எடை கணிசமாக குறைந்துகொண்டே வந்திருக்கிறது. மேலும், சுவாச சிக்கல்களும் ஏற்பட்டதாக நிபுணர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
சோக முடிவு
இதுகுறித்து பேசிய தீயணைப்பு மற்றும் மீட்பு சேவையின் கால்நடை மருத்துவர் ப்ளோரென்ஸ்," நன்னீர் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட திமிங்கிலம் கடலுக்கு கொண்டுசெல்லப்பட்டது. அந்த பயணத்தில் திமிங்கிலத்தின் சுவாச செயல்பாடுகள் மோசமானதை நாங்கள் கவனித்தோம். ஏற்கனவே வெளிப்புறத்தில் ஏராளமான பாதிப்புகள் இருந்தன. அதை கடலில் விடுவிப்பது பலன் இல்லாததால் கருணைக்கொலை செய்ய வேண்டியிருந்தது" என்றார்.
திமிங்கிலத்தின் எடை சுமார் 800 கிலோகிராம்கள் (1,764 பவுண்டுகள்) இருந்ததாகவும் ஆனால் அது சுமார் 1,200 கிலோகிராம்கள் (2,646 பவுண்டுகள்) இருந்திருக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பெலுகாவின் இயற்கை வாழ்விடம் ஆர்க்டிக் மற்றும் துணை ஆர்க்டிக் பகுதிகள் ஆகும். பொதுவாக குளிரான கடல்நீரில் வசிக்கும் இந்த வகை திமிங்கிலம், வடக்கு நார்வே கடல் பகுதியில் இருந்து வந்திருக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், செய்ன் நன்னீர் ஆற்றில் திமிங்கிலம் எவ்வாறு சிக்கிக்கொண்டது என்பது புரியாத புதிராகவே உள்ளது.

மற்ற செய்திகள்
