‘எல்லாத்துக்கும் சீனாவோட’... ‘அந்த மார்கெட் தான் காரணம்’... ‘அதனை க்ளோஸ் பண்ண’... 'ஐ.நா., WHO -க்கு’... ‘கொந்தளித்த பிரதமர்’!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sangeetha | Apr 03, 2020 07:26 PM

உலகில் கொரோனா பரவ காரணமாக இருந்த, சீனாவின் இறைச்சி சந்தையை மூட கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Australian PM Scott Morrison urges WHO, UN to act China\'s wet markets

சீனாவின் ஹூபெய் மாகாணம் வுஹான் நகரில் உள்ள ஹூனான் என்ற இடத்தில் கால்நடை- கடல் உணவு சந்தை உள்ளது. இங்கு கடல் உணவுகளுடன், பாம்பு, நாய், எலி, தேள், கரப்பான் பூச்சி, வவ்வால், முதலைகள், எறும்புத் தின்னி, ஒட்டகம் உள்ளிட்ட 122 விலங்குகளின் இறைச்சிகள் உணவுக்காக விற்கப்படுவதாகவும், இங்குள்ள ஏதோ ஒரு விலங்கில் இருந்து தான் இந்த கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு தொற்றியதாகக் சந்தேகிக்கப்படுகிறது. இதனால் இது ‘கிரவுண்ட் ஜீரோ’ மார்க்கெட் என்றழைக்கப்படுகிறது.

இந்நிலையில் செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘உலகில் இதுபோன்ற சந்தைகள் எங்கு இருந்தாலும், அவை உடலுக்கும், நல்ல வாழ்க்கைக்கும் ஆபத்தானவை என ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் தெரிவித்துள்ளார். இந்த கால்நடை- கடலுணவு சந்தையில் இருந்து உருவான வைரசால், இன்று உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.  உலக மக்களின் உயிரைக் காக்க உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை உடனடியாக இந்த சந்தையை மூட கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்.

‘உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய இந்த சந்தைகள் மூலம், உலகம் முழுவதும் பலரும் கொரோனாவால் பிரச்சனைகளை சந்தித்து வருவது நாம் அறிந்த ஒன்று தான் என பிரதமர் ஸ்காட் மாரிசன் தெரிவித்துள்ளார். இது மிக பெரிய சவாலான விஷயம் தான். எனினும் இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

சீனாவில் புதிதாக யாருக்கும் கொரோனா வைரஸ்  இல்லாததை அடுத்து, அங்கு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட நிலையில், மீண்டும் இந்த கால்நடை-கடல் உணவு இறைச்சிக் கடைகள் செயல்படத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுவரை உலகம் முழுவதும் கொரோனாவால் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.