'லாரி' மோதியதில் 'அப்பளம்' போல் நொறுங்கிய '14 கார்கள்...' 'சங்கிலித்தொடர்' போல நிகழ்ந்த கோர 'விபத்து..'. 'சம்பவ' இடத்திலேயே '18 பேர்' பலி....
முகப்பு > செய்திகள் > உலகம்எகிப்தில் ஊரடங்கு உத்தரவிலிருந்து விலக்கு பெறுவதற்காக காத்திருந்த வாகனங்கள் மீது லாரி ஒன்று பயங்கரமாக மோதிய விபத்தில் சுமார் 14 கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி கோர விபத்து நிகழ்ந்தது. சங்கிலி தொடர் போல் நிகழ்ந்த கோர விபத்தில் 18 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 15 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் எகிப்திலும் வேகமாக பரவி வருகிறது. அங்கு இந்த கொடிய வைரசுக்கு இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர். 500க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், தலைநகர் கெய்ரோ அருகே அத்தியாவசிய பயணம் மேற்கொள்ள விரும்பும் வாகன ஓட்டிகள் தேசிய நெடுஞ்சாலையில் அதிகாரிகளின் அனுமதி பெறுவதற்காக தங்களது வாகனங்களில் காத்திருந்தனர்.
அப்போது எதிரே தறிகெட்டு வந்த லாரி ஒன்று நின்று கொண்டிருந்த கார்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் சுமார் 14 கார்கள் அடுத்தடுத்து சங்கலித்தொடர் போல ஒன்றோடு ஒன்று மோதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த கோர விபத்தில் 18 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 15 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
