செல்போனை திருடி சென்ற இளைஞர்.. 1 கிமீ ஓடிச்சென்று பிடித்த பெண் போலீஸ்.. பேருந்து நிலையத்தில் நடந்த பரபர சேசிங்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தாம்பரம் பேருந்து நிலையம் அருகே செல்போனை திருடி சென்ற வட மாநில இளைஞர் ஒருவரை பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் விரட்டிப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
![Woman Cop chasing cellphone thief around 1 km In Tambaram Woman Cop chasing cellphone thief around 1 km In Tambaram](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/woman-cop-chasing-cellphone-thief-around-1-km-in-tambaram.jpeg)
Also Read | சபரிமலையில் விஐபி தரிசன விவகாரம்.. உயர்நீதிமன்ற நீதிபதிகள் விதித்த அதிரடி உத்தரவு..!
சென்னையை அடுத்த தாம்பரம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு காவல் துறை அதிகாரியாக பணியாற்றி வருபவர் காளீஸ்வரி. இவர் நேற்று முன்தினம் தாம்பரம் பேருந்து நிலையப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கூடுவாஞ்சேரி செல்லும் அரசு பேருந்தில் ஏறிய வட மாநில இளைஞர் ஒருவர் கொஞ்ச நேரத்தில் அதிலிருந்து கீழே இறங்கி வேகமாக நடந்திருக்கிறார்.
இதனைக் கண்டு சந்தேகம் அடைந்த போலீஸ் அதிகாரி காளீஸ்வரி, அந்த இளைஞரை விசாரணை செய்ய நினைத்திருக்கிறார். தன்னை பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் பார்ப்பதை அறிந்த அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி ஓடி இருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த காளீஸ்வரி அவரை துரத்தியபடியே ஓடி இருக்கிறார். சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் ஓடி அந்த இளைஞரை பிடித்த காளீஸ்வரி அவரிடம் விசாரணை நடத்தி இருக்கிறார். அப்போது அவரிடத்தில் ரூபாய் 78,000 மதிப்புள்ள ஐபோன் ஒன்று இருந்திருக்கிறது.
அந்த செல்போன் யாருடையது என்று காளீஸ்வரி கேட்க, இளைஞர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்திருக்கிறார். இதனால் சந்தேகம் அடைந்த காளீஸ்வரி அந்த இளைஞரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று இருக்கிறார். இதனிடையே அந்த செல்போனுக்கு ஒரு போன் கால் வந்திருக்கிறது. அதில் பேசிய ஒருவர் தான் செல்போனை தொலைத்து விட்டதாகவும் அது தன்னுடைய போன் எனவும் தெரிவித்திருக்கிறார்.
இதனால் அது திருடப்பட்ட செல்போன் தான் என அறிந்து கொண்ட காளீஸ்வரி, போன் செய்தவரை காவல் நிலையத்திற்கு வரும்படி கூறி இருக்கிறார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் செல்போனை தொலைத்தவர் ஆண்டிமடத்தைச் சேர்ந்த மாயவேல் என்பது தெரிய வந்திருக்கிறது. அவர் அளித்த புகாரின் அடிப்படையில் செல்போனை திருடிய ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சோட்டா எனும் இளைஞரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
செல்போனை திருடி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிய வட மாநில இளைஞரை துணிச்சலாக ஓடிச் சென்று கையும் களவுமாக பிடித்த பெண் போலீஸ் அதிகாரி காளீஸ்வரிக்கு தாம்பரம் காவல் ஆய்வாளர் சார்லஸ் உள்ளிட்ட அதிகாரிகள் சால்வை அணிந்து பாராட்டு தெரிவித்தனர்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)