"அன்பு தான் எல்லாமே".. 20 வருடங்களுக்கு பிறகு மீட்கப்பட்ட பெண்.. ஜெயிச்ச பாச போராட்டம்.. நெகிழ்ச்சி பின்னணி!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்திரபிரதேச மாநிலம் மதுரா என்னும் பகுதியைச் சேர்ந்தவர் ரிஷார். இவரது மனைவியின் பெயர் முபீனா. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாக குடும்ப பிரச்சனை காரணமாக வீட்டில் இருந்து முபீனா வெளியேறியதாக கூறப்படுகிறது.

உத்தரபிரதேச மாநிலத்திலிருந்து தமிழகம் வந்த முபீனா, திருப்பத்தூர் மாவட்டத்தில் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் அலைந்து திரிந்ததாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பாக, முபீனாவுக்கு மனநலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.
அப்படி ஒரு சூழலில், அவரைப் பற்றிய விவரம் போலீசாருக்கு தெரிய வர, அப்பகுதியில் உள்ள மனநல காப்பகம் ஒன்றிலும் சேர்த்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ரமேஷ் என்பவர் இத்தனை ஆண்டுகளாக முபீனாவை கவனித்து வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்படி ஒரு சூழலில், ஆக்ரா பகுதியில் ஏர்போர்ஸில் பணிபுரிந்து வரும் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த அருண் குமார் என்பவர், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக தனது உறவினர் ஒருவரின் பிறந்தநாளை முன்னிட்டு முபீனா இருந்த மனநல காப்பத்திற்கு உணவு வழங்குவதற்காகவும் வந்துள்ளார்.
அப்போதும் முபீனா குறித்து ஆக்ரா பகுதியில் விசாரித்து பார்க்கவும் அருண்குமாரிடம் ரமேஷ் கூறியுள்ளதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து மறுபடியும் ஆக்ரா போன அருண்குமார், ரமேஷ் சொன்னதன் பெயரில் முபீனா என்ற பெண் குறித்து அங்கே உள்ள காவல் நிலையத்தில் விசாரித்து பார்த்துள்ளார். அப்படி தகவல் கொடுத்ததின் பெயரில் முபீனாவின் குடும்பத்தை போலீசார் உதவியுடன் கண்டுபிடித்த நிலையில், வீடியோ கால் மூலம் குடும்பத்தாரிடம் முபீனாவை பேசவும் வைத்துள்ளனர்.
இந்த நிலையில், முபீனாவின் குடும்பத்தை சேர்ந்த 4 பேர், திருப்பத்தூர் வந்து அவரை கண்டதும் கட்டித் தழுவி கண்ணீர் வடிக்கவும் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, உரிய நடவடிக்கைக்கு பிறகு மாவட்ட ஆட்சியர் குறை தீர்க்கும் கூட்டத்தில், அவர் முன்னிலையில் குடும்பத்தினரிடம் முபீனாவை ஒப்படைத்துள்ளனர். அதே போல, மாவட்ட ஆட்சியர் மற்றும் காப்பக நிறுவனர் ரமேஷுக்கு முபீனாவின் குடும்பத்தினர் தங்களின் நன்றியையும் தெரிவித்தனர்.

மற்ற செய்திகள்
