அரசு பள்ளி பால்கனி இடிந்து 3 மாணவரகள் மீது விழுந்த சோகம்..! அதிர்ச்சியில் பெற்றோர்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Selvakumar | Jun 26, 2019 12:02 PM
மதுரையில் அரசு பள்ளி பால்கனி சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே அரசு உதவிபெரும் ஆயிரம் வைசிய மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் சுமார் 500 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை பள்ளி திறக்கப்பட்டுள்ளது. அதனால் மாணவர்கள் வழக்கம்போல் பள்ளிக்கு வரத் தொடங்கியுள்ளனர்.
அப்போது பள்ளியின் பால்கனி சுவர் எதிர்பாராத விதமாக இடிந்து கீழே விழுந்துள்ளது. இதில், பள்ளிக்குள் சென்றுகொண்டிருந்த 3 மாணவர்கள் மீது இடிந்த சுவர் துண்டுகள் விழுந்துள்ளன. இதனால் 3 மாணவர்களுக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து மூவரையும் உடனடியாக மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து உடனடியாக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த மாணவர்கள் 11 -ம் வகுப்பு பயிலும் வீரக்குமார் மற்றும் 12 -ம் வகுப்பு பயிலும் குமாரவேல், சக்திவேல் என்பது தெரியவந்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் பள்ளியின் பால்கனி சுவர் இடிந்து விழுந்தது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
