'சோஷியல் மீடியா அக்கெவுண்ட்டுடன்’... ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமா?'... விவரம் உள்ளே!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Oct 14, 2019 02:26 PM
சமூக வலைத்தள கணக்குகளுடன், ஆதார் எண்ணை இணைப்பது குறித்த வழக்கில், உச்சநீதிமன்றம் அளித்த முக்கிய உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனைவருக்கும் ஒரே அடையாள அட்டை என்ற திட்டத்தின்கீழ், கொண்டுவரப்பட்ட ஆதார், எல்லாவற்றோடும் இணைக்க வேண்டிய அவசியமில்லை என்று உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. இருப்பினும் வருமான வரிக்கான பான், வங்கிக் கணக்கு, சிம் கார்டு உள்ளிட்டவைகளில், ஆதார் அவசியம் தேவைப்படுகிறது. இந்நிலையில், மோசடிகளை தடுக்க, ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டா போன்ற சமூக வலைத்தள கணக்குகளுடன், ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க உத்தரவிட வேண்டும் என, வழக்கறிஞர் அஸ்வினி குமார் என்பவர், பொதுநல மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்ததார்.
அந்த மனுவில், ஆன்லைன் மற்றும் சைபர் குற்றங்கள் அதிகமாகி கொண்டிருக்கும் நிலையில், இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை விரைவில் பிடிக்க, சமூக வலைத்தள கணக்குகளுடன், ஆதார் எண் இணைக்க வேண்டும் என்பதே மனுதாரரின் கோரிக்கையாக இருந்தது. இந்நிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது ஏற்கனவே இதுபோன்ற வழக்கு ஒன்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்றும், எல்லா வழக்குகளையும் நாங்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என நீதிபதிகள் கூறினர்.
வேண்டுமெனில், சென்னை உயர்நீதிமன்றத்தில், நீங்கள் வழக்கை தாக்கல் செய்யுங்கள் என்று மனுதாரரிடம், உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறினர். பின்னர், சமூக வலைத்தள கணக்குகளுடன், ஆதாரை இணைக்க வேண்டிய தேவையில்லை என்றும் தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்வதாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
