'நான் செத்தாலும் யாரோ ஒருத்தர் தான் என்ன தூக்க போறாங்க...' என்னோட மீதி வாழ்க்கையிலும் 'இந்த' தொழிலை தான் செய்வேன்...! துணிச்சல் முதியவரின் வாழ்க்கை...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Feb 25, 2020 01:35 PM

என்னுடைய மீதி வாழ்க்கையிலும் தண்டவாளத்தில் கிடக்கும் உடல்களை அகற்றும் பணியிலேயே ஈடுபட விரும்புகிறேன் என்று மதுரையை சேர்ந்த முதியவர் காளிமுத்து கூறியுள்ளார்.

Old man working on the corpses on the railway tracks

மதுரை ரயில் நிலையம் அடுத்துள்ள மேலப்பெருமாள் மேஸ்திரி வீதியை சேர்ந்தவர் காளிமுத்து( 67). இவர் அந்த பகுதியில் ரோட்டோரத்தில் தான் எப்போதும் மது அருந்திக்கொண்டு படுத்துக் கிடப்பார். அப்படி படுத்து கிடப்பவரின் அருகே சென்று ‘டேய் காளி’ என்று அழைத்தால் உடனே எழுந்துக்கொள்வார். மதுரை மாநகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ரயில் தண்டவாளங்களில், அடிபட்டு சிதைந்து கிடக்கும் சடலங்களை எடுக்கும் பணியில் காளிமுத்து கடந்த 25 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார். ரயில் தண்டவாள பகுதிகளில் பிணம் கிடப்பது தெரியவந்தால், ஆர்.பி.எப். போலீசார் எந்த நேரமும் காளிமுத்துவை தேடிச் சென்று விடுவார்கள்.

போலீசாரின் ‘டேய் காளி’ என்கிற அழைப்பு விடுக்கிற நேரங்களில் அணிந்திருந்த துணிகள் அனைத்தையும் களைந்துவிட்டு உடனே கிளம்பி விடுவார். ரயில் தண்டவாளத்தில் சிதைந்து கிடக்கும் உடலை எந்த ஒரு அருவருப்பின்றி எடுத்துக்கொண்டு சைக்கிள் ரிக்‌ஷாவில் மதுரை அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை கிடங்குக்கு கொண்டு செல்வார். இதற்காக அவருக்கு ரூ.200 முதல் ரூ.500 வரை வழங்கப்படுகிறது.

இந்த பணியைக் குறித்து காளிமுத்து தெரிவிக்கையில், “நான் முன்பு சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டுநராக இருந்தேன். பெட்ரோல்-டீசல் வாகனங்கள் புழக்கத்துக்கு வந்த பிறகு வருமானம் வெகுவாக குறைந்து விட்டது. இதனால் நான் வேறு தொழிலுக்கு மாற வேண்டிய இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் 25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் மதுரை ரயில்வே போலீசார் என்னிடம் வந்து ‘தண்டவாளத்தில் ஒரு பிணம் கிடக்கிறது, பிரேத பரிசோதனை கிடங்குக்கு எடுத்து செல்கிறாயா?’ என்று கேட்டனர். இதனை அடுத்து நான் சம்பவ இடத்தில் பிணத்தை எடுத்து சவக்கிடங்கில் இறக்கினேன். இதற்காக எனக்கு அப்போது சன்மானமாக ரூ.200 கிடைத்தது. இது எனக்கு அப்போது பெரிய தொகையாக இருந்தது. எனவே மதுரை ரயில் தண்டவாளத்தில் பிணம் அகற்றுவதையே தற்போது தொழிலாக செய்து வருகிறேன்.

நான் முந்தைய நாட்களில் சட்டை அணிந்து தான் பிணம் அகற்றும் பணியில் ஈடுபட்டேன். அப்போது சட்டையில் ரத்தக்கறை படும். துவைத்தாலும் கறை போவதில்ல. அதனால் வெற்றுடம்புடன் பணியில் ஈடுபடுகிறேன். இந்த தொழிலை நான் அவமானமாக கருதவில்லை. நாளைக்கு நான் இறந்தால் யாரோ ஒருவர் தானே என்னை தூக்கிச் செல்லப் போகிறார்?” என்கிற காளிமுத்து வாழ்நாள் முழுவதும் தண்டவாளத்தில் பிணம் அகற்றும் பணியில் ஈடுபட விரும்புகிறேன்" என்று கூறியுள்ளார்.

Tags : #OLDMAN #RAILWAYTRACK