"விஜய் படங்களுக்கே இந்த நிலையென்றால்".. " தமிழகத்தில் தெலுங்கு படங்களை வெளியிட விடமாட்டோம்".. சீமான் பரபரப்பான அறிக்கை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்களின் முடிவுக்கு எதிராக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
![NTK Seeman Statement about Telugu Producers Council decisions NTK Seeman Statement about Telugu Producers Council decisions](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/ntk-seeman-statement-about-telugu-producers-council-decisions.jpeg)
வால்டேர் வீரய்யா, வீர சிம்ம ரெட்டி, வாரிசு மற்றும் துணிவு ஆகிய 4 பெரிய படங்கள் 2023 சங்கராந்திக்கு தெலுங்கு மாநிலங்களில் வெளியாக உள்ளன.
வரும் சங்கராந்திக்கு ரிலீஸ் ஆக உள்ள படங்களுக்கு தியேட்டர் பங்கீடு குறித்த செய்திக் குறிப்பை தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சில நாட்களுக்கு முன் வெளியிட்டது.
தெலுங்கு மாநிலங்களில் தெலுங்கு நேரடி படங்களுக்கு முதல் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், தியேட்டர்கள் இருந்தால், அவை டப்பிங் படங்களுக்கு ஒதுக்கப்படும் என்றும் கவுன்சில் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிக்கையில், "தெலுங்குப் படங்களின் தயாரிப்புச் செலவு அதிகரிப்பு, தயாரிப்பாளர்களின் நலன், தெலுங்குத் திரைப்படத் துறையைக் காப்பாற்றுதல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு 08.12.2017 அன்று நடைபெற்ற தெலுங்குத் திரைப்பட வர்த்தக சபையின் அவசரக் கூட்டத்தில் “தெலுங்கு நேரடிப் படங்கள் மட்டுமே திரையரங்குகளில் எடுக்க வேண்டும்” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சங்கராந்தி மற்றும் தசரா பண்டிகையின் போது தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும்.
இது தொடர்பாக, பிரபல தயாரிப்பாளரும், தெலுங்கு திரைப்பட வர்த்தக சபையின் தற்போதைய துணைத் தலைவருமான ஸ்ரீ தில்ராஜு, 2019 ஆம் ஆண்டு, "பண்டிகைக் காலங்களில் டப்பிங் செய்யப்பட்ட தெலுங்குப் படங்களுக்கு எப்படி தியேட்டர்களை வழங்குவது என்றும், அதனால் முதல் முன்னுரிமை தெலுங்கு படங்களுக்கு அளிக்கப்படும்" என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
பண்டிகை நாட்களில் திரையரங்குகளில் திரையிடுவதற்காக நேரடி தெலுங்கு திரைப்படங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பண்டிகைகளின் போது மீதமுள்ள திரையரங்குகளில் டப்பிங் செய்யப்பட்ட தெலுங்கு திரைப்படங்களுக்கு வழங்கப்படும்". என அந்த தெலுங்கு தயாரிப்பாளர்கள் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த முடிவுக்கு எதிராக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், "விழாக்காலங்களில் நேரடித் தெலுங்குத் திரைப்படங்களுக்கு மட்டுமே ஆந்திராவில் முன்னுரிமை அளிக்கப்படும் எனும் தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது. எண்ணற்ற தெலுங்குத்திரைப்படங்கள் தமிழகத்தில் எவ்விதத் தடையுமின்றி வெளியாகிக் கொண்டிருக்கிற நிலையில், தமிழ்த்திரைப்படங்கள் வெளியாவதற்குக் கெடுபிடி விதித்திருக்கும் தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முடிவு மிகத்தவறான முன்னுதாரணமாகும்.
ஆந்திரா, கர்நாடகா, கேரளா என மூன்று மாநிலங்களைச் சேர்ந்த திரைத்துறையினருக்கும் புகலிடமாகவும், மூலமாகவும் விளங்கிய தமிழ்த்திரையுலகை வஞ்சிக்கும் இப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. தெலுங்குத்தயாரிப்பாளர்கள் சங்கத்தின் திடீர் முடிவால், தமிழ்த்திரையுலகில் முன்னணி நடிகராகத் திகழும் அன்புத்தம்பி விஜய் அவர்களது வாரிசு திரைப்படத்தின் வெளியீட்டுக்கானத் திரையரங்க ஒதுக்கீட்டில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. நேரடித்தெலுங்குத் திரைப்படங்களோ, மொழிமாற்றம் செய்யப்பட்ட தெலுங்குத் திரைப்படங்களோ எதுவாகினும் தமிழகத்தில் எவ்விதப் பாரபட்சப்போக்குக்கும், கட்டுப்பாடுகளுக்கும் உட்படுத்தப்படாது, தமிழ்த்திரைப்படங்களுக்கு இணையாகத் திரையரங்குகளைப் பெற்று வரும் நிலையில், ஆந்திர மாநிலத்தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இந்நடவடிக்கை தேவையற்ற ஒன்றாகும்.
பாகுபலி, ஆர்.ஆர்.ஆர்., புஷ்பா, காந்தாரா, கே.ஜி.எப். எனப் பிறமொழி படங்களுக்கு தமிழகத்தில் திரையரங்குகள் ஒதுக்கீடு செய்யப்படும்போது, அப்படங்களுக்கு இருந்த மக்கள் ஆதரவுதான் அளவுகோலாக வைக்கப்பட்டதே ஒழிய, மொழிப்பாகுபாடு ஒருபோதும் காட்டப்பட்டதில்லை. 'கலைக்கு மொழி இல்லை' என்றுகூறி, தமிழ்த்திரையுலகிலும், திரையரங்க ஒதுக்கீட்டிலும் மற்ற மொழியினருக்கும், அவர்களது திரைப்படங்களுக்கும் பெருவாய்ப்பு வழங்கி, ‘தென்னிந்திய நடிகர் சங்கம்' எனப் பெயரைத் தாங்கி நிற்கும் தமிழ்த்திரையுலக்கு இந்நிகழ்வு ஒரு பாடமாகும்.
திரைப்படைப்புகளுக்கும், படப்பிடிப்புகளுக்கும் மற்ற மொழியினரையும், மற்ற மாநில திரைத்துறையையும் பயன்படுத்திக்கொண்டு, திரையரங்க ஒதுக்கீட்டில் காட்டப்படும் சமத்துவமற்ற இத்தகைய அணுகுமுறை நலம் பயக்கக் கூடியதல்ல! தென்னிந்திய நடிகர்களுள் முதன்மையானவராகத் திகழும் தம்பி விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படத்திற்கே இந்நிலையென்றால், மற்ற படங்களின் நிலை என்னவாகும்? எனும் கேள்விதான் எழுகிறது. இச்சிக்கல், விஜய் எனும் ஒரு நடிகரின் திரைப்பட வெளியீட்டுக்கு எழுந்திருக்கும் சிக்கலல்ல; தமிழ்த்திரைப்படங்களின் வெளியீட்டுக்கெதிராகவே ஆந்திராவில் தொடுக்கப்பட்டிருக்கும் மறைமுக நெருக்கடியாகும். இதனை ஒருபோதும் ஏற்கவோ, அனுமதிக்கவோ முடியாது.
ஆகவே, தமிழ்த்திரைப்படங்களின் வெளியீட்டுக்கெதிரான தெலுங்குத்திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் இம்முடிவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன். அதனைச் செய்யத் தவறும்பட்சத்தில், தெலுங்குத்திரைப்படங்களைத் தமிழகத்தில் வெளியிட அனுமதிக்க மாட்டோமென வன்மையாக எச்சரிக்கிறேன்." என சீமான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)