“ரஜினிக்கு எழுதிக் கொடுத்து பேச வெச்சுருக்காங்க..”.. “ஒரே கல்லுல 2 மாங்கா!”.. அமீர் பரபரப்பு பேட்டி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Jan 28, 2020 01:23 PM

திரைப்பட இயக்குநரும் நடிகருமான அமீர் பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்காக கொடுத்த பிரத்யேக பேட்டியின் சுருக்கம்:  ‘ரஜினி அந்த விழாவில் கலந்துகொள்ள சென்றபோதே, அது திட்டமிட்ட சதி என்று தெரியும். ரஜினி அந்த நிகழ்வில் பயிற்றுவிக்கப்பட்டு அனுப்பப் படுகிறார் என்கிற என் கருத்தை ஊர்ஜிதப்படுத்திக்கொண்டேன். இது முரசொலிக்கும் துக்ளக்குமான ஒப்பீடு கிடையாது.

director ameer exclusive interivew speaking about rajinikanth

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல, பெரியாரையும் திராவிட கட்சிகளை வீழ்த்துவதற்காகவுமானதுதான் ரஜினிகாந்தின் பேச்சு. எனக்கு காவி சாயம் பூச முடியாது என்று கூறும் ரஜினியின் மீது நாம் யாரும் காவி சாயம் பூசவில்லை. அவரேதான் காவிச் சாயம் பூசிக்கொள்கிறார்.  பெரும்பான்மை சமூகம் ஆன்மிகத்தில் நம்பிக்கை கொண்டிருக்கும் நிலையில், பெரியாரின் இயக்கங்கள் இன்றைய சூழலில் காலாவதி ஆகிவிட்டாலும், கடவுள் நம்பிக்கை உள்ள வெகுமக்கள் பெரியாரை கையில் எடுத்துக் கொள்கிறார்கள். அவர்களிடையே பெரியார் வலுவாக நிற்கிறார். இந்த சிக்கலை எப்படி எதிர்கொள்வது என்பதுதான் பாஜகவின் பிரச்சனையாக இருக்கிறது.

நம் வீட்டில் மூலையில் இருக்கும் கம்பினை பாம்பு உள்ளே வரும்போது எடுப்பது போல், தமிழகத்தில் சனாதன சிந்தனை உள்ளே வரும்போது பெரியார் என்கிற கம்பினை கையில் எடுக்கிறோம். அதை மக்கள் செல்வாக்கு கொண்ட ஒருவரின் மூலமாகத்தான் வீழ்த்த முடியும். அதுதான் ரஜினி என்று நான் கருதுகிறேன். இந்த சதியில் ரஜினி தானாக விழுந்தாரா அல்லது விழவைக்கப்படுகிறாரா என்பதுதான் கேள்வி.

துக்ளக் விழாவில் ரஜினி பேசியதே, அவருக்கு சொல்லிக் கொடுத்து பேசப்பட்டதுதான். ரஜினி பேசும் அநேகமான நிலைப்பாடுகளுமே பாரதி ஜனதாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டினைதான் ரஜினி எடுத்திருந்தார். அவர் மக்கள் பக்கத்திலேயே நின்றதில்லை. அவர் 40 ஆண்டுகாலமாக மக்களை சந்திக்க போகாத நிலையில், தூத்துக்குடி போராட்டத்துக்கு போனதன் பின்னாலும் சதிதான் உள்ளது. துக்ளக் விழாவில் கலந்துகொண்ட ரஜினி, விடுதலைச் சிறுத்தைகள் நடத்தும் அம்பேத்கரின் பிறந்த நாள் விழாவில் கலந்துகொள்வாரா? இமானுவேல் சேகரனின் நினைவுநாள் நிகழ்வில் கலந்துகொள்வாரா? தேவரின் குருபூஜையில் கலந்துகொள்வாரா?

ரஜினியும், பாண்டேவும் தங்களை நடுநிலைவாதிகளாக சித்தரித்துக் கொள்கிறார்கள். ரஜினியை கடைசி நம்பிக்கை என்று சொல்லும் தமிழருவி மணியன் கோட்சேவை விடவும் ஆபத்தானவர். இந்த தேசத்தில் இருக்கும் அனைத்து மாநிலங்களிலும் ஊழல் இருக்கிறது. தன்னை காந்தியவாதி என்று சொல்லிக்கொள்ளும் தமிழருவி மணியன், காந்தியை சுட்டுக்கொன்ற, காந்தியை பற்றி தவறாக பாடப்புத்தகங்களில் பதித்துக் கொண்டிருக்கும் பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொள்வதில் தவறில்லை என்று சொல்லும்போது அவர் கோட்சேவை விட ஆபத்தானவர்தானே?

தலைவன் என்று மக்கள் அன்பாக பார்க்கப்படும் ஒரு பிரபலமாக, மக்கள் பிரச்சனைகளில் நேரடியான தன்னுடைய நிலைப்பாட்டினை ஏன் ரஜினி தெரிவிப்பதில்லை? ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிப்பதும், 234 தொகுதிகளிலும் சட்டமன்றத் தேர்தலில் நிற்பதும் உறுதி என்று கூறிய பிறகுதானே நாம் இந்த கேள்விகளை எல்லாம் முன்வைக்கிறோம்? 

Tags : #RAJINIKANTH #AMEER #INTERVIEW