'அவர் உறுதியா இருந்தா போதும்' ...'ரஜினிக்காக நான் களமிறங்க ரெடி'... சுப்ரமணியன் சுவாமி அதிரடி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் நடைபெற்ற துக்ளக் 50-ஆவது ஆண்டு விழாவில், 1971-ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த பேரணியில் ராமர், சீதை உருவ பொம்மைகள் உடையின்றி, செருப்பு மாலை அணிவித்து கொன்டுவரப்பட்டதாக நடிகர் ரஜினிகாந்த் விமர்சித்தார். அவரின் இந்த பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து பெரியாரின் மாநாட்டில் ராமரின் நிர்வாணப் படம் கொண்டுவரப் படவில்லை என்றும், பெரியார் ராமர் படத்தை செருப்பால் அடிக்கவில்லை என்று பெரியாரிய இயக்கத்தினர் விளக்கமளித்தனர். மேலும், இதுதொடர்பாக ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று வலியுறுத்தினர். இந்நிலையில் தனது போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, ''தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது'' என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.
இந்நிலையில் ரஜினி மன்னிப்பு கேட்க முடியாது என கூறிவிட்டதால், அவருக்கு எதிராக அவதூறு வழக்குத் தொடர்வதற்கான வாய்ப்புகள் இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து ''நடிகர் ரஜினிகாந்த் தனது கருத்தில் உறுதியாக இருந்தால் அவருக்காக நீதிமன்றத்தில் ஆஜராக தயார்'' என சுப்ரமணியன் சுவாமி அதிரடியாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ''ரஜினிகாந்த் மிகப் பெரிய நடிகர். அவரால் எந்த வழக்கறிஞரையும் வாதாட அழைக்க முடியும். ஆனாலும் நான் அவருக்காக இலவசமாக வாதாட தயாராக உள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார்.
