"எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்".. ஆண் நண்பருடன் சேர்ந்து மாமியாருக்கு ஸ்கெட்ச்.. CCTV-யில் சிக்குன மருமகள்
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை: ஆண் நண்பருடன் சேர்ந்து திட்டமிட்டு மாமியாரின் நகை பறிப்பில் ஈடுபட்ட மருமகளை போலீசார் கைது செய்தனர்.

ஆவடியை அடுத்த அண்ணனூர், தேவி நகர், சிவகாமி தெருவை சேர்ந்தவர் வினோத்குமார் (35). இவர், பாடியில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி லதா என்ற மோகனசுந்தரி (30). இவர், மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவர்களுடன் வினோத்குமாரின் தாயார் லலிதா (60) வசித்து வருகிறார். வழக்கம்போல் நேற்று வினோத்குமார் வீட்டிலிருந்து வேலைக்கு சென்றுவிட்டார். இந்நிலையில், லதாவும் வீட்டிலிருந்து மளிகை கடைக்கு சென்று விட்டார்.
வீட்டில் இருந்தவரிடம் நகை பறிப்பு
பின்னர், வீட்டில் லலிதா மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது, சுமார் 30வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வீட்டுக்குள் வந்து அவரது கழுத்தில் கிடந்த 3 சவரன் தங்கச்சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்றார்.இது குறித்து மருமகள் லதா ஒன்றும் தெரியாதது போல் திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் விஜயராகவன் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை தீவிரமாக ஆய்வு செய்தனர். அதில், லதா வீட்டின் அருகே மொபைட்டில் வாலிபர் ஒருவரை அழைத்து வந்து சாலையில் இறக்கி விட்டு செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
சிசிடிவி வீடியோ
இதனையடுத்து, போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் லதாவை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், லதாவின் தங்கையின் மருத்துவ செலவுக்கு பணம் தேவைபட்டது. இதனால், மாமியார் லலிதாவிடம் இருந்து நகைகளை வாங்கி அடகு வைத்து மருத்துவ செலவுக்கு பணம் கொடுத்துள்ளார். இதன் பிறகு, லலிதா நகைகளை உடனடியாக மீட்டு தருமாறு லதாவுக்கு டார்ச்சர் கொடுத்து உள்ளார். பின்பு, லதாவும் பணத்தை புரட்டி அடகு கடையில் இருந்து நகையை மீட்டு லலிதாவிடம் கொடுத்துள்ளார். இதன் பிறகு, மாமியார் லலிதா மீது மருமகள் லதாவுக்கு ஆத்திரம் இருந்துள்ளது. அவரை பழிவாங்க வேண்டும் என லதா திட்டம் தீட்டியுள்ளார்.
மாமியாரை பலி தீர்த்த மருமகள்
இதனையடுத்து, ஆவடி அடுத்த அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த தனது பள்ளி தோழரான கார்த்திகேயன் (32) என்பவரது உதவியை நாடியுள்ளார். பின்னர், அவர் கார்த்திகேயனிடம் மாமியார் அணிந்திருந்த நகையை பறித்து என்னிடம் தருமாறு கூறியுள்ளார். இதற்கு கார்த்திகேயனும் ஒப்புக்கொண்டு உள்ளார். இந்நிலையில், நேற்று லதா கார்த்திகேயனை மொபட்டில் அழைத்து கொண்டு வீட்டு அருகில் விட்டு விட்டு சென்றுவிட்டார். அதன்பிறகு, கார்த்திகேயன் வீட்டுக்குள் சென்று லலிதாவிடம் இருந்து 3சவரன் தங்கச்சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடினார். திருடிய தங்க சங்கிலியை லதாவிடம் கொடுத்து விட்டு சென்றது தெரியவந்தது.
தலைமறைவு
மேலும், லதாவை இரண்டு மணி நேரத்தில் கைது செய்த போலீசார் 3 சவரன் தங்கச்சங்கிலியை பறிமுதல் செய்தனர்.இந்த வழக்கு தொடர்பாக தலைமறைவாக உள்ள லதாவின் பள்ளி தோழரான கார்த்திகேயனை போலீசார் தேடி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
