‘வரவேண்டாம்.. வீட்ல இருந்தே வேலை செய்ங்க!’.. கொரோனா பரவாமல் இருக்க’.. ‘முதல் ஆளாக முடிவெடுத்த சென்னை நிறுவனம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Mar 12, 2020 10:07 AM

உலகம் முழுவதும் பல நாடுகள் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக முயற்சித்து வரும் நிலையில் பல்வேறு நாடுகளில் பள்ளிகள், தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் பல முன்னறிவிப்பின்றி மூடப்பட்டிருக்கின்றன. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகமாகியதை அடுத்து இந்தியா முழுவதும் 56 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

chennai company permits employee to work from home

இந்நிலையில் தமிழகத்தில் ஓமனில் இருந்து வந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டு பின்னர் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் பரிபூரணமாக குணமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை அடுத்து தமிழகம் வைரஸ் தொற்று இல்லாத மாநிலமாக உருமாறி இருக்கிறது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிப்படுத்தப்படுவதற்கு முன்பாகவே பெருங்களத்தூரில் இயங்கிவரும் சோஹோ என்கிற மென்பொருள் நிறுவனம் கடந்த வாரம் வியாழன் முதல் தமது ஊழியர்களை அலுவலகத்திற்கு வந்து வேலை செய்ய வேண்டாம் என்று கூறியுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் தெரிவிக்கும்பொழுது தங்களது நிறுவனத்தில் கடந்த 5-ஆம் தேதி அன்று வெளிநாட்டுக்கு சென்று வந்திருந்த இருவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதாக சொல்லப்பட்டதை அடுத்து அவர்கள் உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அன்றைய நாள் பணி முடிந்து அனைவரும் வீட்டுக்கு சென்ற பிறகு நிறுவனத்தின் தரப்பிலிருந்து மெயில் மூலம் அலுவலகத்துக்கு யாரும் வரவேண்டாம் என்றும் அதற்கு மாறாக வீட்டிலிருந்தே பணிபுரியுமாறும் தகவல் அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த அலுவலகத்தின் ஊழியர்கள் மட்டும் சுமார் 5 ஆயிரம் பேர் வீட்டிலிருந்தே வேலை செய்து வருவதாகவும், எனினும் முக்கிய அதிகாரிகள் மட்டும் தங்களது பணிகளை அலுவலகத்துக்கு சென்று செய்து வருவதாகவும், தற்காலிகமாக பயோமெட்ரிக் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. அதே சமயம் கொரோனா வைரஸ் தாக்கம் இருக்கலாம் என கருதப்பட்ட இந்நிறுவனத்தின் ஊழியர்களும் கொரோனா தொற்று இன்றி, நலமுடன் இருப்பதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தொற்று இருப்பதாக அறிகுறிகள் தென்பட்ட உடனேயே இந்த நிறுவனம் வருமுன் காக்கும் விதமாக இத்தகைய நடவடிக்கையை எடுத்து, உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #CHENNAI #CORONAVIRUS #EMPLOYEE