அண்ணா சீக்கிரம் வாங்க! பதறியடித்து ஓடிவந்த சகோதரர், ஒரே நாளில் அனைத்தையும் இழந்து நின்ற குடும்பம்
முகப்பு > செய்திகள் > தமிழகம்புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபர் வீட்டில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள கோபாலபட்டினத்தைச் சேர்ந்தவர் 50 வயதான ஜகுபர் சாதிக். இவர், புரூணை நாட்டில் 7 இடங்களில் சூப்பர் மார்க்கெட் வைத்து தொழில் நடத்தி வருகிறார். வேலையில் பிஸியாக இருக்கும் சாதிக் புரூணையிலேயே வீடு வாங்கி குடும்பத்தினருடன் தங்கிவருகிறார்.
ஊருக்கு வரவில்லை
30 ஆண்டுகளுக்கும் மேலாக புரூணையில் வசித்து வரும் சாதிக் மூன்று மாதம் ஒரு முறை தன் சொந்த ஊரான கோபாலபட்டினத்திற்கும் வந்து செல்வதையும் வழக்கமாக வைத்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இவர் ஊருக்கு வரவில்லை.
மேலும், தொழிலாதிபாரன சாதிக் பள்ளிவாசல் கட்டுதல் போன்ற இறை பணிக்கும், இயலா நிலையில் உதவி கேட்டு வருவோருக்கும் ஜகுபர் சாதிக் நிறைய உதவி செய்து வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
கதவு உடைப்பு
இந்நிலையில், நேற்று ஜகுபர் சாதிக்கின் சகோதரி சாதிக்பீவி அண்ணன் வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்துள்ளார். அதிர்ச்சியடைந்த சாதிக்பீவி வீட்டிற்குள் விரைந்து வந்து, வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, கீழ்தளத்தில் உள்ள ஒரு அறை கதவின் பூட்டும், மேல் தளத்தில் உள்ள ஒரு அறை கதவின் பூட்டும் உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
750 பவுன் நகை
உடனடியாக சாதிக்பீவி, புரூணையில் உள்ள தனது சகோதரர் ஜகுபர் சாதிக்குக்கு தகவல் தெரிவித்துள்ளார். சாதிக் தன் தங்கையிடம் வீட்டின் மேல் தளத்தில் உள்ள அறையில், ஒரு அட்டைப் பெட்டிக்குள் வளையல், சங்கிலி, காசு உள்ளிட்ட சுமார் ரூ.3 கோடி மதிப்புள்ள 750 பவுன் நகைகளை வைத்து, துணிகளை போட்டு மூடி வைத்திருந்ததாக அவர் கூறியுள்ளார்.
மிளகாய்த்தூள்
ஆனால் சாதிக்பீவி சென்று பார்த்த போது அந்த நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. மேலும், தடயங்களை மறைப்பதற்காக வீட்டின் உள் மற்றும் வெளிப் பகுதியில் மிளகாய்த்தூளை தூவிவிட்டு சென்றுள்ளனர்.
மோப்பநாய் கொண்டு விசாரணை
இந்த கொள்ளை சம்பவம் குறித்து மீமிசல் காவல் நிலையத்தில் சாதிக்பீவி புகார் அளித்துள்ளார். மேலும், கோட்டைப்பட்டினம் காவல் துணை கண்காணிப்பாளர் மனோகரன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை செய்தனர். தடயவியல் நிபுணர்கள் வந்து வீட்டில் இருந்த தடயங்களை பதிவு செய்து கொண்டனர். அத்துடன், மோப்ப நாய் கொண்டும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. கொள்ளை நடந்த வீட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் ஆய்வு செய்தார்.
மேலும் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். செல்போன் டவரில் பதிவாகியுள்ள அழைப்புகளை வைத்தும் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்
