‘அது எப்டி நீங்க பண்ணலாம்?’..கொதித்தெழுந்த ‘தல’..‘பயத்தில் மிரண்டு போன நடுவர்கள்’.. என்னதான் நடந்தது?.. வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Apr 12, 2019 01:16 AM

நடுவர்களின் குழப்பத்தால் கடுப்பாகி தோனி மைதானத்துக்குள் செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.

WATCH: Umpiring decision draws angry reaction from Dhoni goes viral

ஐபிஎல் டி20 லீக்கின் 25 -வது போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நேற்று(11.04.2019) நடைபெற்றது. இப்போட்டியில் ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மற்றும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 5 போட்டிகளை வென்று 10 புள்ளிகளுடன் சென்னை அணி முதல் இடத்தில் உள்ளது.

இந்நிலையில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்ய ராஜஸ்தான் அணியின் தொடக்கவீரர்களாக ரஹானே மற்றும் பட்லர் களமிறங்கினர். இதில் ரஹானே 14 ரன்களிலும், பட்லர் 23 ரன்களிலும் அடுத்தடுத்து அவுட்டாகினர். இதனை அடுத்து வந்த வீரர்களும் தொடர்ந்து அவுட்டாக 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு ராஜஸ்தான் அணி 151 ரன்களை எடுத்தது.

இதனைத் தொடர்ந்து 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி விளையாடி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய வாட்சனும், டு பிளிஸிஸும் அடுத்தடுத்து அவுட்டாக, அடுத்த வந்த ரெய்னாவும் 4 ரன்களில் எதிர்பாராத ரன் அவுட்டில் வெளியேறினார். இதனை அடுத்து ஜோடி சேர்ந்த தோனி மற்றும் அம்பட்டி ராயுடுவின் கூட்டணி அதிரடியாக விளையாட ஆரம்பித்தனர். இதில் ராயுடு 57 ரன்களும், தோனி 58 ரன்களும் எடுத்தனர்.

இந்நிலையில் கடைசி ஓவரில் 2 பந்துக்கு 4 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ராஜஸ்தான் வீசிய பந்தை இரு நடுவர்களில் ஒருவர் ‘நோ பால்’ என அறிவித்தார். ஆனால் மற்றொரு நடுவர் நோ பால் இல்லை என கூறினார். இதனால் கடுப்பான கேப்டன் தோனி உடனே மைதானத்திற்குள் சென்று நடுவர்களிடம் முறையிட்டார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Tags : #IPL #IPL2019 #CSKVSRR #MSDHONI #WHISTLEPODU #YELLOVE #VIRALVIDEO